தானே மருத்துவமனையில் ஐசியுவில் பெண் நோயாளியை சீரழித்த இளம் டாக்டருக்கு ஆயுள்
மும்பை: தீவிர சிகிக்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தானேவில் உள்ள லோட்டஸ் மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி இரவு இளம்பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை மோசமாக உள்ளதாகக் கூறி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர் விஷால் வான்னே மயக்க ஊசி கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
பாதி மயக்கத்தில் இருந்த பெண்ணுக்கு நடப்பது என்னவென்று தெரிந்தாலும் அதை தடுக்க அவருக்கு தெம்பு இல்லை. மயக்கம் தெளிந்த பிறகு அப்பெண் நடந்தது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஷாலை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தானே நீதிமன்றம் மருத்துவர் விஷால் வான்னேவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.