மூன்று ஊழியர்கள் கொலை வழக்கு- திரிபுரா பத்திரிகை அதிபருக்கு ஆயுள் தண்டனை
திரிபுராவில் வெளிவரும் நாளேடு டெய்னிக் கன்தூத். இந்நாளேட்டில் பணிபுரிந்து வந்த மேலாளர் ரஞ்சித் சவுத்ரி, ப்ரூஃப் ரீடர் சுஜித் பட்டாசார்ஜி, ஓட்டுநலர் பலராம் கோஷ் ஆகியோர் கடந்த ஆண்டு மே மாதம் 19-ந் தேதி படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலைகள் தொடர்பாக 'டெய்னிக் கன்தூத்' நாளேட்டின் உரிமையாளரும் ஆசிரியருமான சுஷில் சவுத்ரியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த 15-ந் தேதியன்று அகர்தலா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மூன்று ஊழியர்கள் கொலை வழக்கில் டெய்னிக் கன்தூத் அதிபர் சுஷில் சவுத்ரி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.
தண்டனை பற்றி தீர்ப்பளித்த நீதிபதி கிரிபங்குர் சக்கரவர்த்தி, இது அரிதிலும் அரிதான வழக்கு. மூவரையுமே சவுத்ரி திட்டமிட்டே கொலை செய்திருக்கிறார். இந்த குற்றத்தின் தன்மை கருதி சவுத்ரிக்குத் தூக்கு தண்டனை விதிக்கலாம். ஆனால் வயது காரணமாகத்தான் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என்றார்.