பழிக்குப் பழி.. போலீஸ் எஸ்.ஐ-யை பழிவாங்க காவல் நிலையத்தையே இருட்டில் தவிக்க விட்ட லைன் மேன்!
பரேலி : உத்தர பிரதேச மாநிலம் பரேலி அருகே உள்ள ஹர்தாஸ்பூர் காவல் நிலைய அதிகாரி தனக்கு அபராதம் விதித்ததையடுத்து மின் வாரிய ஊழியர் ஒருவர் காவல் நிலையத்தின் மின்சார இணைப்பைத் துண்டித்துள்ளார்.
ஹர்தாஸ்பூர் காவல் நிலையத்திற்கு நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அந்த காவல் நிலைய போலீசார் உயர் காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, விசாரித்ததில், பழிக்குப் பழியாக மின் வாரிய ஊழியர் ஒருவர் மின் இணைப்பை துண்டித்ததாக தெரியவந்தது. ஆனால், சட்ட விரோத மின் இணைப்பு இருந்ததாலேயே துண்டித்ததாக அந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் மத ரீதியிலான மோதல்: ஒரே மதத்தைச் சேர்ந்த 36 பேர் கைது
லைன் மேன்
உத்தர பிரதேச மாநிலம் பரேலி அருகே உள்ள ஹர்தாஸ்பூர் பகுதியில் மின்சார வாரியத்தில் லைன் மேனாக பணியாற்றி வருபவர் பகவான் ஸ்வரூப். அவர் நேற்று முன் தினம் மாலை மின்சார பிரச்சனையை சரி செய்வதற்காக அருகேயுள்ள கிராமத்திற்கு தனது டூ-வீலரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோடி சிங் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளார்.
பைக்கை நிறுத்தி
லைன் மேன் பகவான் ஸ்வரூப்பின் பைக்கை நிறுத்திய போலீஸ் எஸ்.ஐ மோடி சிங், ஹெல்மெட் அணியாததால் அவரிடம் ஹெல்மெட் எங்கே என்று கேட்டுள்ளார். மின்சார பிரச்சனையை சரி செய்யப் போகும் அவசரத்தில் மறந்து விட்டதாக கூறியுள்ளார் பகவான் ஸ்வரூப். மேலும், ஆவணங்களையும் தரும்படி அவரிடம் கேட்டுள்ளார். ஸ்வரூப் தன்னிடம் தற்போது ஆவணங்கள் இல்லை என்றும், வீட்டிற்குச் சென்று அவற்றை எடுத்து வந்து காட்டுவதாகக் கூறியுள்ளார்.
அபராதம்
போலீஸ் அதிகாரி மோடி சிங், அவரது பேச்சைக் கண்டு கொள்ளாமல் அவருக்கு ரூ. 500 அபராதம் விதித்து சலான் கொடுத்துள்ளார். இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த பகவான் ஸ்வரூப், மின்சார துறையில் பணியாற்றும் தனது சக ஊழியர்களை தொடர்பு கொண்டு மோடி சிங் பணியாற்றும் காவல் நிலையத்தின் மின் இணைப்பை துண்டித்துள்ளார்.
மின் திருட்டு
அந்த காவல் நிலையத்தில் மின்சாரம் மீட்டர் இல்லை என்றும், அது சட்டவிரோத மின் இணைப்பு பெறப்பட்டது என்பதாலுமே, தனது உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்ததாகவும், எஸ்.ஐ மீது மின் திருட்டு புகார் அளிக்கப்போவதாகவும் ஸ்வரூப் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.