குஜராத் பட்டேல்களைப் போல கர்நாடகவில் பாஜகவை தெறிக்கவிடும் 'லிங்காயத்துகள்'
குஜராத்தில் பாஜகவை பதம் பார்த்த பட்டேல்களைப் போல கர்நாடகாவில் லிங்காயத்துகள் கிளர்ச்சி அக்கட்சிக்கு அச்சுறுத்தலாகிவிட்டது.
Recommended Video

பெங்களூர்: குஜராத்தில் பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்த பட்டேல்கள் எப்படி அக்கட்சிக்கு பரம எதிரியாக மாறி காங்கிரஸுடன் கை கோர்த்தார்களோ அதேபோல் கர்நாடகாவில் லிங்காயத்துகள் விஸ்வரூபம் காட்டு தெறிக்கவிட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் பட்டேல்கள் இதுவரை பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்தனர். இந்த சமூகத்தின் 12%க்கும் மேற்பட்ட வாக்குகள் அப்படியே 'இந்துக்கள்' என ஒருமுகப்படுத்தப்பட்டு பாஜகவால் அறுவடை செய்யப்பட்டு வந்தது.
கடந்தசில ஆண்டுகளுக்கு முன்னர் பட்டேல்கள் இடஒதுக்கீடு கோரி கிளர்ச்சியில் இறங்கினர். இதை குஜராத் பாஜக அரசு ஒடுக்கியது. இதனால் காலம் காலமாகிய பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்த பட்டேல்கள் அப்படியே அந்த கட்சியை கை கழுவிவிட்டனர்.

சவுராஷ்டிராவில் மரண அடி
இதன்விளைவைத்தான் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக அனுபவித்தது. பட்டேல்கள் அதிகம் உள்ள சவுராஷ்டிரா- கட்ச் பிராந்தியத்தில் பாஜக மரண அடி வாங்கியது. காங்கிரஸுக்கு அமோகமாக பட்டேல்கள் வாக்களித்தனர். இதே நிலைமைதான் கர்நாடகாவிலும் இருப்பதும் பாஜகவை பீதிக்குள்ளாக்கியுள்ளது.

ஜேடியூ(எஸ்)
கர்நாடகாவில் ஒக்கலிகர்கள், லிங்காயத்துகள் இரு பெரும் சமூகத்தினர். இதில் ஒக்கலிகர்கள் தங்களது சமூகத்தின் கட்சியாக பார்ப்பது மதச்சார்பற்ற ஜனதா தளத்தை மட்டுமே. லிங்காயத்துகளைப் பொறுத்தவரையில் இதுவரையில் பாஜகவின் வாக்கு வங்கியாகத்தான் இருந்து வந்தனர். ஆனால் இம்முறை நிலைமை தலைகீழாகிவிட்டது.

கிளர்ச்சியில் லிங்காயத்துகள்
லிங்காயத்துகளையும் இந்துக்கள் என்ற போர்வையில் ஒருமுகப்படுத்தி வைத்திருந்து பாஜக. ஆனால் இப்போது லிங்காயத்துகளோ தாங்கள் இந்து மதத்தினர் அல்ல; எங்களது வீர சைவம் என்பது தனி மதம்; அதை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும்; இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மாபெரும் கிளர்ச்சியை நடத்தி வருகிறது. ஆம் பாஜகவின் பிரதான வாக்கு வங்கி அப்படியே சுக்கு நூறாகிப் போய்விட்டது.

கர்நாடகா அரசும் ஆதரவு
லிங்காயத்து சமூகத்தின் இந்த கிளர்ச்சியை முன்னெடுப்பதே காங்கிரஸ் கட்சியின் அமைச்சரான எம்.பி. பாட்டீல்தான். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி முழுமையாக லிங்காயத்துகளின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறது. வட மற்றும் மத்திய கர்நாடகாவில் இதுவரை பாஜக வாக்கு வங்கியாக இருந்த லிங்காயத்துகள் அந்த பாஜகவின் அடிப்படை சித்தாந்தத்தையே எதிர்த்து கலகக் குரல் எழுப்பி காங்கிரஸுடன் இணைந்துவிட்டனர்.

ஜேடியூ(எஸ்) ஆதரவு
தற்போதைய நிலையில் கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள்தான் பாஜகவுக்கு முழு நம்பிக்கை தரக் கூடியதாக இருக்கிறது. ஆகையால் வரப் போகிற சட்டசபை தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கப் போகும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தயவை நாடுவதில் இப்போதே பாஜக மும்முரமாக இருந்து வருகிறது.

படுஜூரத்துடன் பாஜக
ஒக்கலிகர் சமூகமும் அதன் மடாதிபதிகளும் பிராமணர் எதிர்ப்பை மையமாக கொண்டவர்கள். ஒக்கலிகர் சமூகத்தின் அடிப்படை சித்தாந்தமே பிராமணர் எதிர்ப்புதான். இருந்தபோதும் அரசியல் சூழலுக்கேற்ப கொள்கைகள் மாறுகின்றன. ஆகையால் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கைகோர்ப்பதுதான் பாஜகவுக்கு இருக்கும் ஒற்றை நம்பிக்கை. தேர்தல் களத்தை தொடங்கும்போதே படுஜூரத்துடனேயே இறங்குகிறது பாஜக.












Click it and Unblock the Notifications