'சன்பிளவர்' ஆயிலில் கலந்து பேரல் பேரலாக இந்தியா வழியாக கடத்தப்படும் கோகெயின் ... திடுக் தகவல்கள்
டெல்லி: சன்பிளவர் ஆயிலில் கோக்கெய்னை திரவமாக கலந்து பேரல் பேரலாக இந்தியா வழியாக கோகெயின் போதைப் பொருள் கடத்தப்படுவதாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்மையில் வங்கதேச போலீசார் 15 மில்லியன் டாலர் மதிப்பிலான கோகெய் பேரல்களை பறிமுதல் செய்தனர். வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தில் இறக்கப்பட்டு இந்திய துறைமுகங்கள் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு இது கடத்தப்பட இருந்தது.

பொதுவாக போதைப் பொருட்கள் கடத்தலில் லத்தீன் அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த மாஃபியா கும்பல்களே அதிகம் ஈடுபடுகின்றன. அண்மைக்காலமாக கோகெயின் போதைப் பொருளை திரவமாக்கி சமையல் எண்ணெயில் கலந்து வெளிநாடுகளுக்கு கடத்தும் யுக்தியை இந்த கடத்தல் கும்பல் கடைபிடிட்த்து வருகிறது.
கடந்த மே மாதம் வங்கதேசத்தில் கோகெய்ன் போதைப் பொருள் கலந்த 107 எண்ணெய் பேரல்களை அந்நாட்டு போலீசார் பறிமுதல் செய்தனர். பெரிய கப்பல்களில் இருந்து சிட்டகாங் துறைமுகத்தில் இறக்கப்படும் இந்த போதைப் பொருள் கலந்த பேரல்கள், சிறிய கப்பல்களுக்கு மாற்றப்பட்டு இந்திய துறைமுகங்களுக்கு கொண்டுவரப்படுகின்றன.
இந்திய துறைமுகங்களின் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சர்வதேச சந்தையில் விநியோகிக்கப்படுகிறது. இதேபோல் பிற ஆசிய நாடுகளுக்கும் இந்த கோகெயின் பேரல்கள் பயணப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் பெங்களூரு, டெல்லி மும்பை ஆகிய நகரங்களை 'பிக் அப்' பாயிண்டுகளாக கடத்தல் கும்பல் பயன்படுத்தி வருகிறது.
இதேபோல் கோவா, ஹிமாச்சல பிரதேசத்தையும் கடத்தல் கும்பல் பயன்படுத்திக் கொள்கிறது. இந்த இடங்களில்தான் அதிக அளவு போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் இவற்றை கடத்தல் கும்பல் தேர்வு செய்துள்ளது. தற்போது இந்த நகரங்களையும் வங்கதேசம் மூலமாக இந்தியாவுக்குள் வரும் எண்ணெய் பேரல்களும் மிகவும் உன்னிப்பாக உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications