திக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு
Recommended Video
போபால்: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் தோல்வி அடைந்தால் தாம் உயிருடன் ஜீவசமாதி அடைவேன் என பிரகடனம் செய்த அகோரிபாபா பைரக்யானந்த் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் போபால் லோக்சபா தொகுதியில் திக்விஜய்சிங் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மாலேகான் குண்டுவெடிப்பில் சிறைவாசம் அனுபவித்த சாத்வி பிரக்யாசிங்கை பாஜக வேட்பாளராக நிறுத்தியது.
ஆனால் ராமர் கோவிலை கட்டாததால் அதிருப்தி அடைந்த அகோரி பாபாக்கள் உள்ளிட்ட 7,000 சாமியார்கள் திக்விஜய்சிங்கை ஆதரித்தனர். திக்விஜய்சிங் வெல்ல வேண்டும் என்பதற்காக யாகங்களை நடத்தினர்.
இதில் கம்ப்யூட்டர் பாபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பஞ்சயதி நிரஞ்சனி அகாடாவை சேர்ந்த மகாமண்டலேஸ்வரர் சுவாமி பைரக்யானந்த் என்பவர், திக்விஜய்சிங் தோல்வி அடைந்தால் தாம் ஜீவசமாதி அடைவேன் என அறிவித்தார்.
மேலும் திக்விஜய்சிங் வெல்வதற்காக நாள்தோறும் 5 கிலோ காய்ந்த மிளகாயை நெருப்பில் போட்டு யாகமும் வளர்த்து வந்தார். இந்நிலையில் லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பிரக்யாசிங்கிடம் 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திக்விஜய்சிங் தோல்வி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜீவசமாதி அடைவதாக அறிவித்த பைரக்யானந்த் தலைமறைவாகிவிட்டார். அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லை ஜீவசமாதி அடைந்துவிட்டாரா? என மத்திய பிரதேசத்தில் பரபரப்பு நிலவுகிறது.