நரேந்திர மோடியை திடீரென பாராட்டிய அத்வானி!
இன்று சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் ரூ. 3,671 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள 500 மெகாவாட் புதிய மின் நிலைய திறப்பு விழாவில் பேசிய அத்வானி,
கிராமப் பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் என்பது குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைப் போலவே சட்டீஸ்கர் முதல்வர் ரமன் சிங்கின் கனவாகும். ஒரே நேரத்தில் பல கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியவர் மோடி.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தான் சட்டீஸ்கர் மாநிலத்தை உருவாக்கும் பொறுப்பை என்னிடம் வழங்கினார். ஓட்டு வங்கி அரசியலுக்காக நாங்கள் இந்த மாநிலத்தை உருவாக்கவில்லை. மக்கள் நலனுக்காக உருவாக்கினோம்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி தான் முதன்முதலில் கிராமப் பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்குவதில் தீவிரம் காட்டியவர். அடிப்படைக் கட்டமைப்பு, மின்சாரத்துறையில் குஜராத் பெருமளவு முன்னேறியுள்ளது என்றார்.
மோடியை பிரதமர் வேட்பாளராக்கியதற்கு கடந்த 3 நாட்களாக தீவிர எதிர்ப்புக் காட்டியதோடு, இது தொடர்பாக ஒரு ஓபன் லெட்டரையும் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு அத்வானி எழுதியிருந்தார்.
இந் நிலையில் திடீரென மின்சாரத்தை வைத்து நரேந்திர மோடி மீது பாச மழை பொழிந்து கட்சியினருக்கே ஷாக் கொடுத்துள்ளார் அத்வானி.
நேற்று ராம்ஜேத்மலானியின் 90வது பிறந்த நாளையொட்டி அவரது வீட்டுக்கு அத்வானியும் மோடியும் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.