அதெப்படி மோடி மட்டும் தனியா பிரசாரம் செய்யலாம்? எகிறும் எல்.கே.அத்வானி!
டெல்லி: பாரதிய ஜனதாவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை மோடி என்ற தனி மனிதர் மட்டும்தான் நடத்த வேண்டுமா? சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்கள் எல்லாம் பேசமாட்டார்களா? என்று கட்சியினரிடையே கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராவோம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார் அத்வானி. ஆனால் கோவாவில் நடைபெற்ற பாஜக செயற்குழுக் கூட்டத்தில் நரேந்திர மோடியை தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக முதலில் அறிவித்தது பாஜக. மோடியை பிரதமர் வேட்பாளருக்குவதற்கான முதல்படி இது என்பதை உணர்ந்த அத்வானி கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்தார்.
டெல்லியில் அத்வானி வீட்டு முன்பு மோடி ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் அத்வானி சமாதானமடைந்தார். அதே நேரத்தில் பிரதமர் வேட்பாளராக மோடியும் அறிவிக்கப்பட்டார்.

அதன்பின்னர் நாடு முழுவதும் மோடி பல பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். பொதுவாக இந்த கூட்டங்களில் அத்வானி, ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு போன்ற ஒரு சில மூத்த பாஜக தலைவர்கள்தான் பேசுகின்றனர். கடைசியாக மோடி பேசுகிறார்.
இந்த நிலையில் அத்வானியின் காந்திநகர் தொகுதியை குறிவைத்து மோடி செயல்படுவதால் ரொம்பவே கொதித்துப் போயிருக்கிறார் அத்வானி. இதன் வெளிப்பாடாக, ராகுல் காந்தி சொல்வது போல் ஒருவரது கட்டுப்பாட்டில் கட்சி இருப்பது நல்லது அல்ல.. மோடியால் மட்டும்தான் கூட்டத்தைக் கூட்ட முடியுமா? சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்கள் எல்லாம் இருக்கிறார்களே.. என்று கூறியிருக்கிறார்.
ஆனால் மோடியின் ஆதரவாளர்களோ, ஒவ்வொரு மாநில பாஜகவினரும் மோடியைத்தான் பேச அழைக்கின்றனர்.. அத்வானிக்கு பிரதமர் பதவி வேட்பாளராக தாம் அறிவிக்கப்படவில்லை என்ற வெறுப்பு இருக்கிறது என்கின்றனர்.
ஏற்கெனவே மோடிக்கு எதிராக குமுறிக் கொண்டிருக்கும் அத்வானி, தேர்தல் நேரத்தில் என்ன செய்வார்? எப்படி எதிர்கொள்வது? என எதற்கும் தயாராகவும் இருக்கிறது மோடி ஆதரவு கூட்டம்.












Click it and Unblock the Notifications