"எங்க எம்.பி அத்வானியை காணவில்லை"... 'குசும்பு' போஸ்டரை ஒட்டியது ஆம் ஆத்மியா? பா.ஜ.க.வா?
காந்திநகர்: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் குஜராத்தின் காந்தி நகர் தொகுதி எம்.பி.யுமான எல்.கே. அத்வானியை காணவில்லை என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் அண்மையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்யும் வகையில் அவரை காணவில்லை எனவும் அவரைப் பற்றி தகவல் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

அத்வானியை காணவில்லை..
தற்போது அதே பாணியில் அத்வானிக்கு எதிராகவும் காந்திநகர் தொகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அத்வானி புகைப்படத்துடன் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில், கடந்த பல ஆண்டுகளாக தொகுதி எம்.பி.யாக இருந்து வரும் அத்வானியை காணவில்லை எனவும் தொகுதியில் பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பார்த்தா சொல்லுங்கப்பா..
மேலும் அத்வானியை யாரேனும் பார்த்தால் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் ஆம் ஆத்மி கட்சியின் காந்திநகர் கிளை என்று அச்சிடப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி மறுப்பு
ஆனால் ஆம் ஆத்மி கட்சியினரோ இந்த போஸ்டரை தாங்கள் ஒட்டவில்லை என்று மறுத்துள்ளனர். மேலும் அத்வானிக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினரே இந்த போஸ்டரை ஒட்டியிருக்கலாம் என்றும் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பாஜகவும் நிராகரிப்பு
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பாரதிய ஜனதா கட்சி, அத்வானிக்கு எதிராக தங்களது கட்சியை சேர்ந்த எவரும் போஸ்டர் ஒட்டவில்லை என மறுத்துள்ளது.
யாருப்பா இந்த வேலையை பார்த்தது?












Click it and Unblock the Notifications