20 ரூபாய் கொடுத்தால் போதும் பதன்கோட் விமானப் படை தளத்தில் ஆடு மேய்க்கலாம் !
டெல்லி: தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான பதன்கோட் விமானப் படை தளத்தை சுற்றியுள்ள உள்ளூர் மக்கள் 20 ரூபாய் கொடுத்து தங்களது ஆடுகளை மேய்த்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளத்தில் கடந்த 2 ஆம் தேதி நுழைந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 7 பேர் வீரமரணம் அடந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதையடுத்து பதன்கோட் பகுதியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில் விமானப்படை வளாகத்திற்குள், அப்பகுதியைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செல்லும் சிலர், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு சுமார் 20 ரூபாய் வரை பணம் கொடுத்துவிட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
ஒதுக்குப்புறங்களில் உள்ள சில வாயில்களில் பணியாற்றும் பாதுகாப்பு படையினருக்கு பணம் கொடுத்துவிட்டு, உள்ளே சென்று கால்நடைகளை மேய விடுவது பொதுவான நடைமுறை என்று உளவுத்துறை நிறுவனங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், பதான்கோட் விமான தளத்தில் உள்ள 'கேன்டீன்' மற்றும் கடைகளில் வெளிநபர்கள் தாராளமாக சென்று பொருள்களை வாங்கி வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. சிலர் சொந்தமாக அடையாள அட்டையே வைத்திருப்பதும், சிலர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு லஞ்சம் அளித்து உள்ள சென்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
விமானப்படை தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான குஜ்ஜார் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகளுக்கு ஏற்ற புற்கள் விமனப்படை வளாகத்திற்குள் வளர்ந்திருப்பதால் மேய்ச்சலுக்கு அனுமதிக்கப்படுகிறது.
விமானப்படை தளத்தின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களை கணக்கெடுக்கும் நடவடிக்கையை பஞ்சாப் அரசு தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications