லோதா கமிட்டி பரிந்துரை.. பிசிசிஐக்கு கால அவகாசம் வழங்கியது சுப்ரீம் கோர்ட் #Lodha
டெல்லி: பிசிசிஐக்கு நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று கோரி லோதா கமிட்டி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உத்தரவு எதுவும் வழங்காமல் வழக்கை ஒத்தி வைத்துள்ளது சுப்ரீம் கோர்ட்.
பிசிசிஐ நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைந்த லோதா கமிட்டி பல பரிந்துரைகளை வழங்கியது. அதை பிசிசிஐ செயல்படுத்த மறுக்கிறது. இதை எதிர்த்து பிசிசிஐ தாக்கல் செய்த மனு மீது இன்று மீண்டும் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
விசாரணையின்போது, லோதா கமிட்டி பரிந்துரைக்கு எதிராக தான் ஐசிசி உதவியை நாடவில்லை என பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். மேலும், லோதா கமிட்டி பரிந்துரையை நிறைவேற்ற கால அவகாசம் தேவை என பிசிசி தரப்பில், கோரிக்கைவிடுக்கப்பட்டது.
இதற்கு லோதா கமிட்டி சார்பில் ஆஜரான, கோபால் சுப்பிரமணியம் எதிர்ப்பு தெரிவித்தார். பிசிசிஐ தொடர்ச்சியாக சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறுவதாகவும், எனவே நிர்வாகி ஒருவரை நியமித்து பிசிசிஐ கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கோர்ட் தீர்ப்பை மதிக்கவில்லை என சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை பிசிசிஐக்கு எதிராக தொடர வேண்டும் என்றும், கோபால் சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த சுப்ரீம்கோர்ட், லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த பிசிசிஐக்கு கால அவகாசம் கொடுத்து, இப்போதைக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல், வழக்கை ஒத்தி வைத்துள்ளது.