மிசோரமில் தொங்கு சட்டசபை.. காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு? பாஜக வாஷ் அவுட்- பரபர புது சர்வே!
ஐஸ்வால்: மிசோரம் மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபைக்குதான் வாய்ப்பு என ஒரே வாரத்தில் 2-வது தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இம்மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு அமையக் கூடும் என்பதையே இக்கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள். மிசோரம் மாநிலத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் மற்றும் பாஜக ஆகியவை களத்தில் உள்ளன. மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 7-ந் தேதி நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தற்போது மிசோரமில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. மிசோரமில் வேட்பு மனுத் தாக்கலுக்கு நாளை கடைசி நாள்.

2018-ல் மிசோரம் முடிவுகள்: 2018-ம் ஆண்டு மிசோரம் சட்டசபை தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 26; காங்கிரஸ் 5; ஜோரம் மக்கள் இயக்கம் 8 இடங்களில் வென்றது. பாஜக ஒரு இடத்தில் வென்றது. மிசோ தேசிய முன்னணியுடன் கூட்டணி ஆட்சியில் இணைந்ததால் பாஜக ஆளும் மாநிலங்கள் பட்டியலில் மிசோரமும் இணைந்தது.
தொங்கு சட்டசபை: மிசோரம் சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக அண்மையில் Small Box India ஒரு கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை அறிவித்திருந்தது. அந்த கருத்து கணிப்பில் ஆளும் மிசோ தேசிய முன்னணி 12-14 இடங்கள்; காங்கிரஸ் 11-13 இடங்கள்; ஜோரம் மக்கள் இயக்கம் 9-11 இடங்கள் பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது பெரும்பான்மைக்கு தேவையான 21 இடங்களை எந்த ஒரு கட்சியும் பெறாமல் தொங்கு சட்டசபையே அமையும் என்றது அக்கருத்து கணிப்பு.
Lok Poll கருத்து கணிப்பு: தற்போது Lok Poll, மிசோரம் சட்டசபை தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. மொத்தம் 21,250 பேரிடம் நடத்தப்பட்ட இக்கருத்து கணிப்பிலும் மிசோரம் மாநிலத்தில் தொங்கு சட்டசபைக்குதான் வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. Lok Poll கருத்து கணிப்பு முடிவுகளின் படி ஆளும் மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை தலா 12 முதல் 14 இடங்களிலும் காங்கிரஸ் 10 முதல் 12 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜக உள்ளிட்ட இதர கட்சிகள் 1 முதல் 3 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணி அரசு?: மணிப்பூர் விவகாரத்தில் பாஜக மீது ஆளும் மிசோ தேசிய முன்னணி கடும் அதிருப்தியில் உள்ளது. மிசோரம் மக்களும் மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட குக்கி இன மக்களு தொப்புள் கொடி கொண்ட ஒரே இனத்தவர்; மணிப்பூர் வன்முறையை மத்திய பாஜக அரசு கட்டுப்படுத்தவில்லை என்பதால் மிசோரமில் பாஜக மீது கடும் கோபம் நிலவுகிறது. மிசோரம் மாநிலத்தில் பாஜகவுக்கு அதிகபட்சம் 1 இடம் கிடைக்கக் கூடும் என்பதுதான் இதுவரையிலான கருத்து கணிப்புகளின் முடிவுகள். இதனால் மிசோ தேசிய முன்னணி அல்லது ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசை அமைக்கக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். கடந்த தேர்தலில் வெறும் 5 இடங்களைப் பெற்று ஓரம்கட்டப்பட்ட காங்கிரஸ் இம்முறை இரு மடங்கு இடங்களை வெல்லும் என்பது கருத்து கணிப்புகள் பொதுவாக தெரிவித்து வரும் முடிவுகளாகும்.












Click it and Unblock the Notifications