கேரளாவில் தமிழர்களுக்கு மிரட்டல்- வயநாடு வனப் பகுதியில் 'மாவோயிஸ்டுகள்’ வேட்டையில் தண்டர்போல்ட் படை!
வயநாடு: கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக பணிபுரியும் தமிழர்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என மிரட்டல் விடுத்த மாவோயிஸ்டுகளை அழித்தொழிக்க தண்டர்போல்ட் எனும் சிறப்பு அதிரடிப்படை களமிறங்கி உள்ளது.
கேரளாவில் மொத்தம் 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகள் அனைத்துக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் கேரளாவின் 20 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 89 லோக்சபா தொகுதிகளில் 2-வது கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் கேரளாவில் லோக்சபா தேர்தலை சீர்குலைக்கும் வகையில் மாவோயிஸ்டுகள் வனப் பகுதிகளை விட்டு வெளியே வந்துள்ளனர். தமிழ்நாடு எல்லைப் பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் இலங்கையை சேர்ந்த மலையகத் தமிழர்களிடம் இன்று அதிகாலை தங்களது மிரட்டலை விடுத்துள்ளனர். லோக்சபா தேர்தலில் வாக்களிக்க கூடாது; கம்பமலைப் பகுதிக்கு வாக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவோயிஸ்டுகள் மிரட்டி இருக்கின்றனர். துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மாவோயிஸ்டுகள் மிரட்டுகிற வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருகின்றன.
இந்த வீடியோ பதிவுகள் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. மொத்தம் 4 மாவோயிஸ்டுகள், தேர்தலுக்கு எதிராக மிரட்டல் விடுத்திருந்தனர். தற்போது தமிழர்களை மிரட்டிய மாவோயிஸ்டுகள் யார் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மொய்தீன், சோமன், சந்தோஷ் மற்றும் ஆசிக் ஆகிய 4 மாவோயிஸ்டு தீவிரவாதிகளே வாக்களிக்கக் கூடாது என மிரட்டி இருக்கின்றனர். இவர்களில் சோமன் என்ற அக்பர், வயநாடு கல்பேட்டா பகுதியை சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளர்.
இதனையடுத்து வயநாடு வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளை அழித்தொழிக்கும் தண்டர்போல்ட் எனும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் களமிறங்கி உள்ளனர். அடையாளம் காணப்பட்ட மாவோயிஸ்டுகளை சுட்டு வீழ்த்த தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்தீஸ்கரில் அண்மையில் 29 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரில் லோக்சபா தேர்தலை சீர்குலைக்க முயன்றதால் 29 மாவோயிஸ்டுகள் அழித்தொழிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications