ஜாதி அஸ்திரத்தை கையில் எடுத்த பாஜக.. ம.பியில் திசை மாறும் காற்று.. கவலையில் காங்கிரஸ்!
மத்திய பிரதேசத்தில் லோக்சபா தேர்தலில் ஜாதி வாக்குகள் பாஜக கட்சிக்கு பெரிய அளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
போபால்: மத்திய பிரதேசத்தில் லோக்சபா தேர்தலில் ஜாதி வாக்குகள் பாஜக கட்சிக்கு பெரிய அளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவினர் அங்கு செய்யும் பிரச்சாரமும் பெரும்பாலும் ஜாதியை வைத்தே இருக்கிறது.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 29 லோக்சபா தொகுதிகள் உள்ளது. அங்கு இதுவரை 13 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் 16 தொகுதிகளில் அடுத்த இரண்டு கட்ட வாக்குபதிவில் தேர்தல் நடக்கும்.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் பாஜக வித்தியாசமான முறையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. அங்கு பாஜக நிறுத்தி இருக்கும் வேட்பாளர்களும் ஜாதி ரீதியிலான வாக்குகளை கவர கூடியவர்களே.
மீண்டும் தப்பிய மோடி.. தேர்தல் ஆணைய தீர்ப்பில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம்
என்ன பேசினார்
கடந்த வாரம் மத்திய பிரதேசத்தில் பிரச்சாரம் செய்த மத்திய பாஜக அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பிரதமர் மோடியின் இலவச கேஸ் திட்டம் காரணமாக அனைத்து ஜாதியினரும் அதிக பயன் பெறுகிறார்கள். முக்கியமாக இடைநிலை ஜாதியினர் அதிக பலன்களை பெறுகிறார்கள். நாங்கள் கட்டிக்கொடுத்த வீடு காரணமாக ஏழைகள் நலன் பெற்றுள்ளனர். மேலும் இடைநிலை ஜாதியினரின் வியாபாரம் அதிகரித்துள்ளது.
ஏன் ராணுவம்
புல்வாமா தாக்குதல் நடந்த போது, மோடி இந்திய ராணுவத்திற்கு முழு அனுமதி கொடுத்து இருந்தார். அவர்கள் விருப்பப்பட்டபடி தாக்குதல் நடத்த சொன்னார். இந்திய ராணுவம் மோடியின் ஆட்சியின் கீழ் புதிய பலம் பெற்றது என்று குறிப்பிட்டார். இதை கேட்டதும் அங்கிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினார்கள்.
மத்திய பிரதேசம் ஜாதி
மத்திய பிரதேசத்தில், பாஜக கட்சியினர் பலரின் பிரச்சாரம் இப்படித்தான் இருந்தது. இதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் பல தாக்குர் மற்றும் இடைநிலை ஜாதியினர் ராணுவத்தில் இருக்கிறார்கள். இவர்களை கவரவே பாஜக இப்படி ராணுவத்தை வைத்து பிரச்சாரம் செய்து வருகிறது. தாக்குர், பிராமணர்கள், பனியாக்கள், இடைநிலை ஜாதியினரை முன்வைத்துதான் பாஜக தனது பிரச்சாரத்தை திட்டமிட்டுள்ளது.
பாஜகவின் வேட்பாளர்கள்
இந்த ஜாதியினரின் வாக்குகளை 90% பெற்றாலே பாஜக மத்திய பிரதேசத்தில் பெரும்பாலான இடங்களை கைப்பற்ற முடியும். இதனால் பாஜக நிறுத்தி இருக்கும் வேட்பாளர்களும் பெரும்பாலும் இதே ஜாதியை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக பிராமணர்கள் உள்ளிட்ட ஓசி பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கும் பாஜகவின் திட்டமும் இந்த பிரச்சாரத்தில் முன்னுரிமை பெறுகிறது.
மீண்டும் வர முயற்சி
மத்திய பிரதேசத்தில் பாஜகதான் 15 வருடமாக ஆட்சி செய்து வந்தது. ஆனால் 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் அங்கு காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் பாஜக இன்னும் அங்கு வலுவான கட்சிதான். இதனால் மீண்டும் மத்திய பிரதேசத்தில் புதிய வலிமை பெறுவதற்காக பாஜக இந்த ஜாதி அஸ்திரத்தை கையில் எடுத்து உள்ளது.
பகுஜன் சமாஜ் வாக்குகள்
இதேபோல் மத்திய பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும் மிக வலிமையான தலித் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. பாஜக ஓசி மற்றும் இடைநிலை சாதியினர், வாக்குகளை பெறுகிறது, பகுஜன் சமாஜ் தலித் வாக்குகளை பெறுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி பல தொகுதிகளில் பெரிய அளவில் வாக்குகளை இழக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த களநிலவரம் அறிந்து காங்கிரஸ் இனியாவது சுதாரிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!