லோக்சபா தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் வெளியாகிறது
டெல்லி: லோக்சபா தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதுபற்றி தேர்தல் ஆணையம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
தற்போது 15-வது நாடாளுமன்றம் செயல்பட்டு வருகிறது. இதன் பதவிக்காலம், வரும் ஜூன் 1-ந்தேதி முடிகிறது. புதிய 16-வது நாடாளுமன்றம் மே 31-ந்தேதிக்குள் அமைக்கப்படவேண்டும்.
இதற்கு ஏற்ற வகையில் புதிய லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க வேலைகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.

80 கோடி வாக்காளர்கள்
அந்த வகையில் வாக்காளர்கள் பட்டியலில் அடுத்த மாத இறுதிக்குள் திருத்தங்கள் செய்து முடிக்க வேண்டும் என அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்து இறுதி செய்யும் பணி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் மொத்தம் 80 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருப்பார்கள்.

6 கட்ட தேர்தல்
இந்த தேர்தலை 5 அல்லது 6 கட்டங்களாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. தேர்தல் அட்டவணை அடுத்த மாதத்தின் கடைசி நாட்கள் அல்லது மார்ச் மாதம் முதல் 3 நாட்களில் அறிவிக்கப்படலாம் என்கின்றன தேர்தல் ஆணைய வட்டாரங்கள்.

ஏப்ரல் 16 முதல் வாக்குப் பதிவு
முதல் கட்டத்தேர்தலுக்கு 6 வாரங்களுக்கு முன்பாக தேர்தல் அட்டவணை வெளியிடப்படும். ஏப்ரல் 16-ந்தேதி தொடங்கி மே 13-ந்தேதி வரை 5 அல்லது 6 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

8 லட்சம் வாக்குச் சாவடி
இதேபோன்று வாக்குச்சாவடிகளும் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. மொத்தம் 8 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வாக்காளர்கள், வாக்குப்பதிவு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வசதிக்கு ஏற்ற வகையில் சிற்சில வாக்குச்சாவடிகள் மட்டும் மாற்றி அமைக்கப்படுகின்றன.

12 லட்சம் மின்னணு எந்திரங்கள்
இந்த தேர்தலுக்கு 12 லட்சம் மின்னணு ஓட்டு எந்திரங்கள் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

3 மாநில சட்டசபை தேர்தல்
லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஒடிஷா, சிக்கிம் மாநில சட்டசபை தேர்தலும் சேர்த்து நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஆந்திர சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் 2-ந்தேதியும், ஒடிஷா சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் 7-ந்தேதியும், சிக்கிம் சட்டசபையின் பதவிக்காலம் மே 21-ந்தேதியும் முடிகிறது. இதனால் லோக்சபா தேர்தலுடனேயே இத்தேர்தலையும் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications