அசாமில் பாஜகவுக்கு அமோக வெற்றி.. வடகிழக்கிலும் வாரி சுருட்டியது எப்படி? காரணம் இதுதான்
கவுகாத்தி: பாஜக போன்ற கட்சிகளின் வாசமே இல்லாத இடம், என்று ஒரு காலத்தில், சொல்லப்பட்ட அசாமில் இன்று காவிக் கொடி பறக்கிறது. 2016ல் அசாம் மாநில ஆட்சியை பாஜக பிடித்தது மட்டுமல்ல, இந்த லோக்சபா தேர்தலிலும் அதன் வெற்றி பவனி தொடருகிறது.
இந்த தொடர் வெற்றிக்கு காரணம், பாஜகவின் இந்து ஓட்டு வங்கிக்கான வியூகம்தான் என்பது புள்ளி விவரங்களை வைத்து பார்த்தால் தெளிவாக தெரிகிறது.
அசாமில் மொத்தமுள்ள 14 லோக்சபா தொகுதிகளில், பாஜக 10, அசோம் கண பரிஷத் (AGP) மற்றும் தேசிய போடோலேன்ட் மக்கள் இயக்கம் (BPF) ஆகிய கூட்டணி கட்சிகள் முறையே, 3 மற்றும், 1 தொகுதியில் போட்டியிட்டன. இதில் ஒரு தொகுதியில் மட்டுமே தோற்ற பாஜக, 9 தொகுதிகளை வென்றுள்ளது.

வளரும் பாஜக
2014 தேர்தலுடன் ஒப்பிட்டால் இம்முறை அசாமிலிருந்து கூடுதலாக 2 எம்பிக்களை பெறுகிறது பாஜக. அதன் ஓட்டு சதவீதம் என்பது, 54 விழுக்காடாக இருக்கிறது. அசோம் கன பரிஷத் 32 சதவீத ஓட்டுக்களை பெற்றாலும், எந்த தொகுதியிலும் வெல்ல முடியவில்லை. காங்கிரஸ் கட்சி கடந்த முறையை விட 6 சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்று 35 விழுக்காடு என்ற அளவில் உள்ளது. கடந்த முறையை போலவே, இந்த லோக்சபா தேர்தலிலும் 3 சீட்டுகளை காங்கிரஸ் வென்றுள்ளது.

இந்துக்கள் ஓட்டு
பாஜக பிற மாநிலங்களில் போலவே மோடி அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டது என்பது மட்டுமல்ல, இந்து வாக்குகளை பிரித்து தனதாக்கிக் கொண்ட வியூகத்தில் அசாமில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்துள்ளது என்பதே உண்மை. முஸ்லீம்களை தவிர்த்து பிற அனைத்து பிரிவு மக்களின் வாக்குகளையும் பெருமளவில் ஈர்த்தது பாஜகதான் என்கிறது தேர்தல் டேட்டா. தேர்தலுக்கு பிறகு மக்களிடம் எடுத்த ஒரு சர்வே இந்த உண்மையை போட்டு உடைத்துள்ளது. அதை அடுத்து வரும் வரிகளில், நீங்களே பாருங்கள்.

தலித்துகள், ஆதிவாசிகள் பாஜக ஆதரவு
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உயர்ஜாதியினரின் 74 சதவீத வாக்குகளும், காங்கிரசுக்கு 13 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. இதர பிற்படுத்தப்பட்டோர், 22 சதவீதம் காங்கிரசுக்கும், 60 சதவீதம் பேர் தே.ஜ.கூட்டணிக்கும் ஓட்டுப் போட்டுள்ளனர். தலித்துகள் 66 சதவீதம் பேர் பாஜகவுக்கும், 9 சதவீதம் பேர் மட்டுமே காங்கிரசுக்கும் ஓட்டுப் போட்டுள்ளனர். ஆதிவாசி சமூக மக்களின் வாக்குகளும் காங்கிரசுக்கு வெறும் 7 சதவீதமே கிடைத்துள்ளது. பாஜகவுக்கு ஆதிவாசிகளில் 86 சதவீதம் பேர் வாக்குகளை அள்ளி தெளித்துள்ளனர்.

காங்கிரசுக்கு முஸ்லீம்கள் ஆதரவு
முஸ்லீம் வாக்காளர்கள் மட்டுமே காங்கிரசுக்கு ஆறுதல். 70 சதவீதம் முஸ்லீம்கள் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டுள்ளனர். வெறும் 7 சதவீதம் பேர்தான் பாஜக கூட்டணிக்கு ஓட்டளித்துள்ளனர். மத ரீதியாக எடுத்துப் பார்த்தால், இந்துக்களில் 70 சதவீதம் பேர் பாஜகவுக்கும், 16 சதவீதம் பேர் காங்கிரசுக்கும் ஓட்டளித்துள்ளனர்.

தேயிலை தோட்ட தொழிலாளர்கள்
அசாமில் காங்கிரசுக்கு அமோக ஆதரவு அளித்து வருவது முஸ்லீம்கள் மற்றும், இடம் பெயர்ந்து வந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள்தான். இம்முறை முஸ்லீம்கள், காங்கிரசுக்கு ஆதரவு அளித்தபோதிலும், டீ எஸ்டே்ட தொழிலாளர்கள், மதரீதியாக ஒன்றுபட்டு, பாஜகவிற்கே வாக்களித்துள்ளனர்.

மத பிளவு
மோடி அரசு கொண்டுவந்த, சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை கடுமையாக எதிர்த்தவர்கள் அசாமி இந்துக்கள். ஆனால், அவர்களும் கூட, காங்கிரசைவிட, பாஜகவுக்குதான், அதிக ஆதரவை வழங்கியுள்ளனர். அசாமி இந்துக்களில் 75 சதவீதம் பேர், இந்த சட்டத் திருத்தத்தை எதிர்ப்பதாக கூறியுள்ள நிலையில், அவர்களில் 59 சதவீதம் பேர் பாஜகவுக்குதான் ஓட்டும் போட்டுள்ளனர். இந்துக்கள் என்ற வகையில், ஒன்றுபட்டு பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது கடமை என்ற மனநிலை, அசாம் இந்துக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதுதான் பாஜகவின் வெற்றிக்கான சூத்திரம் என்கிறது இந்த புள்ளி விவரம்.












Click it and Unblock the Notifications