மோடி எபெக்ட்: வெளி மாநிலங்களுக்கு சென்றுள்ள தமிழக லாரி ஓட்டுநர்கள் 25,000 பேர் தவிப்பு
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பால் வெளி மாநிலங்களுக்குச் சென்றுள்ள தமிழக லாரி ஓட்டுநர்கள் வாடகையை பெற முடியாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: நவம்பர் 8ம் தேதி செவ்வாய்கிழமையன்று பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த அறிவிப்பினால் வெளி மாநிலங்கள் சென்றுள்ள தமிழக லாரி ஓட்டுநர்கள் 25,000 பேர் தவித்து வருகின்றனர்.
நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும் வங்கிகள் நவம்பர் 9ம் தேதி இயங்காது என்றும் கூறினார் மோடி. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
பெட்ரோல் பங்குகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருந்தகங்கள், மயானங்களில் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லும் என்று மோடி அறிவித்தாலும் நேரம் செல்லச்செல்ல பதற்றம் அதிகரித்தது. ஏடிஎம் மையங்களில் குவிந்தனர்.
வெளி மாநிலங்களுக்கு சென்ற தமிழக லாரி ஓட்டுநர்கள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த லாரி ஓட்டுநர்களின் பாடுதான் படு திண்டாட்டமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் லாரி ஓட்டுநர்கள் வாடகையை பெற முடியாமல் தவிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.