தாஜ்மஹால் அருகே விபரீதம்.. சரமாரியாக தொண்டையை பிளேடால் அறுத்துக் கொண்ட காதல் ஜோடி
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் காதல் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹாலுக்கு அருகே ஒரு காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணும், ஆணும் ஒருவர் தொண்டையை மற்றவர் பிளேடால் அறுத்துக் கொண்டனர். இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தப் பெண் முஸ்லீம் என்றும், ஆண் இந்து என்றும் தெரிய வந்துள்ளது. புதன்கிழமையன்று மக்கள் நடமாட்டம் மிக்க தாஜ் நேச்சர் வாக் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த ஆணின் பெயர் ராஜ்வீர் சிங். 25 வயதான இவர் டேராடூனைச் சேர்ந்தவர். அந்தப் பெண் ஆக்ராவைச் சேர்ந்தவர். பெயர் ஷபனம் அலி. இருவரும் காதலித்து வந்ததை அவர்களது குடும்பத்தினர் ஏற்கவில்லை. இதனால் தற்கொலை செய்ய முடிவு செய்து இங்கு வந்துள்ளனர். பின்னர் பிளேடால் தொண்டையை அறுத்துக் கொண்டனர்.
இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மாஜிஸ்திரேட் நேரில் வந்து வாக்குமூலம் பெற்றார். ஷபனாத்தால் பேச முடியவில்லை. ராஜ்வீர் சிங் மட்டும் மெதுவாகப் பேசி வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், "எங்களது பெற்றோர்களை சமாதானப்படுத்த முயன்றோம். எங்களைத் திருமணம் செய்ய அனுமதிக்குமாறும் கோரினோம். ஆனால் மதம் குறுக்கே நின்று விட்டது. இதனால்தான் தற்கொலைக்கு முயன்றோம். நிம்மதியாக வாழ பலவழிகளிலும் முயன்று எதுவும் முடியாமல் போனதால்தான் இந்த முடிவுக்கு வந்தோம்" என்றார் ராஜ்வீர் சிங்.
இருவரு் மாறி மாறி தொண்டையை அறுத்துக் கொண்டதைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அத்தனை பேரும் ஓடி வந்து இவர்களைத் தூக்கி மருத்தவமனைக்கு ஓடினர்.
மருத்துவமனையில் மேலும் பல உருக்கமான காட்சிகள் அரங்கேறின. வலியால் துடித்து கதறி அழுத ஷபனத்தை தனது வலியையும் பொறுத்துக் கொண்டு ராஜ்வீர் சிங் அமைதிப்படுத்தியதை, ஆறுதலாக கட்டி அணைத்துக் கொண்டதைப் பார்த்து அத்தனை பேரும் கண் கலங்கிப் போனார்கள்.
இதற்கிடையே இந்த இருவர் மீதும் தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யவுள்ளனராம் போலீஸார்.