வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
Recommended Video
டெல்லி: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியால், தமிழகத்தின் சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நிறைவுற்று 3 வாரங்களுக்கு மேலாகியும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக, கோடை காலத்தை காட்டிலும் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.
கூடவே சேர்ந்து அனல் காற்றும் அவ்வப்போது வீசி வருவதால் பகல் நேரங்களில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தலைநகர் சென்னை உட்பட பல வட தமிழக மாவட்டங்களில், இயல்பை விட 3 முதல் 5 டிகிரி வெப்பம் கூடுதலாக கொளுத்தியது.
சுமார் 190 நாட்களுக்கு மேல் மழை பெய்யாததால் சென்னையில் வரலாறு காணாத தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு ஒருபக்கம் மக்களை வேதனையில் ஆழ்த்தியது. மறுபுறம் கொடும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. வெப்பச் சலனம் காரணமாகவும், தென்மேற்கு பருவமழை தாக்கத்தினாலும் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தது.
அப்போது கூட வருண பகவான் சென்னை நகருக்கு கருணை காட்டவில்லை. எப்போது மழை பெய்யும் என சென்னை மக்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை முதல் சென்னை தட்பவெப்ப நிலை சிறிது மாறியது. நேற்று பிற்பகல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே 15 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை மழை பரவலாக பெய்து மக்கள் மனதை குளிர வைத்தது.
இந்நிலையில் தமிழகத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியால், தமிழகத்தின் சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் வடக்கு, தெற்கு வங்க கடல், லட்சத்தீவு கடல்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது












Click it and Unblock the Notifications