எல்பிஜி சிலிண்டர் திடீர்னு தண்டவாளத்தில்.. அடுத்து டிராக்டர்? பதறிய ரயில் டிரைவர்.. அப்பறம் என்னாச்சு?
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்த விசாரணையை ரயில்வே நிர்வாகம் விரைந்து மேற்கொண்டு வருகிறது. அதேசமயம், பயணிகளின் மத்தியில் இதுபோன்ற நிகழ்வுகள் கலக்கத்தையும் உண்டுபண்ணி வருகிறது.
நம்முடைய இந்தியாவில் தொழில்நுட்ப வசதிகள் மிக வேகமாக வளர்ந்து வரும் சூழலிலும்கூட, ரயில் விபத்துகளை ஏன் தடுக்க முடியவில்லை? என்ற கேள்வி பரவலாக எழுந்துவருகிறது.. இத்தனைக்கும் இப்போது எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் (Electronic Interlocking) சிஸ்டம் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன...
அதேபோல, பயணிகள் தரப்பிலும் பாதுகாப்பு அம்சங்கள் பல சேர்க்கப்பட்டிருக்கின்றன.. எனினும், ரயில் விபத்துகளும், இதன்மூலம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையையும் முற்றிலுமாக தடுக்க முடியவில்லை.

ரயில் டிரைவர்கள்: இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் தொடர்பாக கடந்த 2022ல், சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில் சில விஷயங்களை சொல்லியிருந்தது. அதில், முக்கியமானது, ரயில் ஓட்டுநர்கள் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு சிக்னலை கவனிக்க வேண்டும். அத்துடன், அந்த சிக்னலுக்கு ஏற்ப ரயிலின் இயக்கத்தில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதாகும்.
எனினும், ரயில்வே ஊழியர்கள் அல்லாத நபர்கள், உபகரணங்கள், நாச வேலை காரணமாக ஏற்பட்ட விபத்துகள் என ஒவ்வொரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.. ஆனால், 1960 முதல் 2018 ஆண்டு காலகட்டங்களில், ரயில் மோதலை காட்டிலும், தடம் புரண்டு விபத்தில் சிக்கியவை தான் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
எல்பிஜி கேஸ் சிலிண்டர் : இந்நிலையில், நேற்றைய தினம் ஒரே நாளில் 2 சம்பவங்கள் வடமாநிலங்களில் நடந்து பெரிதும் பரபரப்பை உண்டுபண்ணியிருக்கின்றன. உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜ்-பிவானி காளிந்தி எக்ஸ்பிரஸ் ரயிலானது, கான்பூரின் முதேரி கிராமத்தின் கிராசிங் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது, அங்கிருந்த தண்டவாளத்தில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் கிடப்பதை லோகோ பைலட் பார்த்தார்..
இதனால் பதறிப்போன டிரைவர், அவசர அவசரமாக பிரேக் பிடித்தார்.. ஆனாலும், வேகமாக வந்த ரயில், பிரேக் பிடித்ததால், குறைந்த வேகத்தில் சிலிண்டரின் மீது மோதியது. ரயில் ஓட்டுநர் உடனடியாக எமர்ஜென்சி பிரேக்கை பயன்படுத்தியதால், மிகப்பெரிய விபத்து தடுக்கப்பட்டுவிட்டது.. பயணிகளுக்கும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தண்டவாளம்: தண்டவாளத்தில் இந்த கேஸ் சிலிண்டரை யார் கொண்டு வந்து வைத்தார்கள் என்று தெரியவில்லை.. இந்த சிலிண்டருடன் பெட்ரோல் நிரப்பப்பட்ட ஒரு பாட்டில், தீப்பெட்டிகள் , ஒரு பை போன்றவைகளும் தண்டவாளத்தில் இருந்தன.. இவைகளை பறிமுதல் செய்த போலீசார் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்து, விசாரணையையும் துவங்கியிருக்கிறார்கள்.
இந்த பரபரப்பு முடிவதற்குள்ளாகவே, மத்தியபிரதேச மாநிலத்தில் இன்னொரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. ஜபல்பூர்-இட்டார்சி ரயில் வழித்தடத்தில் குராம்கேடி என்ற பகுதியில், சோம்நாத் ரயில் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது... அப்போது தண்டவாளத்தின் குறுக்கே டிராக்டர் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.. இதைப்பார்த்ததுமே ரயில் டிரைவர் பதறிப்போய்விட்டார்..

ரயில் தவிர்ப்பு: உடனடியாக சுதாரித்து கொண்ட டிரைவர், எமர்ஜென்ஸி பிரேக்கை போட்டு, ரயிலை நிறுத்தினார்.. இதனால், டிராக்டர் மீது மோதாமல் ரயில், அதற்கு முன்பேயே நின்றுவிட்டது.. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பிறகு, தண்டவாளத்தில் டிராக்டர் நிற்பதாக, உயரதிகாரிகளுக்கு, ரயில் டிரைவர் தகவல் தந்தார்.. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து, டிராக்டரை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினார்கள்.. அந்த டிராக்டரின் நம்பர் பிளேட்டை வைத்து, அதன் ஓனர் யார் என்பதை கண்டுபிடித்தனர்..
பதற்றம் : நேற்றைய தினம், டிராக்டர் தண்டவாளத்தை கடக்கும்போது திடீரென ரிப்பேர் ஆகிவிட்டதாம்.. எவ்வளவோ முயன்றும் அதை சரி செய்ய முடியாமல், டிராக்டரை அங்கேயே நிறுத்திவிட்டு உரிமையாளர் சென்றது விசாரணையில் தெரியவந்தது. எனினும், சமையல் கேஸ், டிராக்டர் போன்றவை தண்டவாளத்தில் கிடந்தது, பயணிகள் மத்தியில் கலக்கத்தையும், பீதியையும் தந்துவிட்டன..!!












Click it and Unblock the Notifications