பஞ்சாப் தீவிரவாதத் தாக்குதல், வியாபம், லலித் மோடி... நாடாளுமன்றத்தில் பெரும் அமளி, ஒத்திவைப்பு
டெல்லி: பஞ்சாப் தீவிரவாதத் தாக்குதல், வியாபம் முறைகேடு, லலித் மோடி விவகாரம் என பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டங்களில் குதித்ததால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று பெரும் அமளிக்காடானது. இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
லோக்சபா பிற்பகல் 2 மணி வரைக்கும், ராஜ்யசபா நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.
கடந்த ஒரு வாரமாகவே லோக்சபா நடைபெற முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து லலித் மோடி மற்றும் வியாபம் தொடர்பாக கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டு வருவதால் நிகழ்ச்சிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று காலை சபை கூடியதும், ஐபிஎல் முறைகேடு தொடர்பாக மல்லிகார்ஜூன் கார்கே, வீரப்ப மொய்லி, கருணாகரன், பிரேமச்சந்திரன் ஆகியோர் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானம் மற்றும் வியாபம் ஊழல் தொடர்பாக முகம்மது சலீம் கொடுத்தது, தெலுங்கானாவில் உயர்நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக ஜிதேந்திர ரெட்டி கொடுத்த ஒத்திவைப்புத் தீர்மானம் ஆகியவை நிராகரிக்கப்படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் மொத்தமாக எழுந்து போராட்டத்தில் குதித்தனர். காங்கிரஸ் எம்.பிக்கள் கருப்புத் துணியைக் கட்டியபடி, கையில் தட்டிகளை ஏந்தியபடி சபாநாயகர் இருக்கை முன்பு குழுவினர். பிரதமர் மோடி, லலித் மோடி விவகாரத்தில் மெளனம் காப்பதைக் கண்டித்து கோஷமிட்டனர். சுஷ்மா சுவராஜும், வசந்துரா ராஜே சிந்தியாவும் பதவி விலக வேண்டும் என கோஷமிட்டனர்.
அதேபோல சமாஜ்வாடி கட்சி எம்.பிக்கள் ஜாதி வாரியான சென்சஸ் விவரத்தை வெளியிடக் கோரி கோஷமிட்டு போராட்டத்தில் குதித்தனர்.
திரினமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைவரும் அமருமாறு சபாநாயகர் பலமுறை கோரியும் யாரும் அமரவில்லை.அந்த சமயத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, போராட்டத்தை விடாமல் தொடருமாறு காங்கிரஸாருக்கு அறிவுறுத்தினார். இதனால் கூச்சல் குழப்பம் அதிகரித்தது. இதையடுத்து பிற்பகல் 12 மணி வரைக்கும் சபை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் சபை மீண்டும் கூடியபோதும் போராட்டங்கள் ஓயவில்லை. இதனால் பிற்பகல் 2 மணி வரைக்கும் சபை ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபா ஒத்திவைப்பு
இந்த நிலையில் ராஜ்யசபாவில், ராஜ்யசபா எம்.பி. கல்பதரு தாஸ் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் ஆர்.எஸ். கவாய், ஹண்டிக் ஆகியோர் மறைவு காரணமாக இரங்கல் தெரிவித்து இன்று நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.