இந்தியாவின் முதல் திருநங்கை மேயர் சட்டீஸ்கரில் தேர்வு - பாஜக வேட்பாளரை வீழ்த்தினார்!
ராய்கார்க்: சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற மேயர் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலம் ராய்கார்க் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் மது கின்னார் (35) என்ற திருநங்கை போட்டியிட்டார். இவர் பாஜக வேட்பாளர் மகாவீர் குருஜி என்பவரை 4,537 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, மேயராக தேர்வானார். இதன்மூலம் நாட்டிலேயே மேயராக தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை என்ற பெருமையை மது கின்னார் பெற்றுள்ளார்.

தனது வெற்றி தொடர்பாக மது கின்னார் கூறுகையில், ‘மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த வெற்றியை மக்கள் எனக்கு வழங்கிய ஆசி மற்றும் வாழ்த்துக்களாக கருதுகிறேன். அவர்களின் கனவுகளை நிறைவேற்ற பாடுபடுவேன் . இந்த தேர்தலுக்காக ரூ.60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை மட்டுமே செலவு செய்துள்ளேன். தேர்தலில் போட்டியிடுவதற்கு மக்களின் ஆதரவே காரணம். அவர்களின் ஆசி காரணமாகவே வெற்றி பெற்றேன்' எனத் தெரிவித்துள்ளார்.
8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள மது கின்னர் பல்வேறு வேலைகளை செய்தும் ரயில்களில் ஆடிப்பாடி பணம் சேகரித்தும் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications