பள்ளி வேனில் வைத்தே பலாத்காரம்.. 3 வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.. பெற்றோர்களே உஷார்
போபால்: மத்திய பிரதேசத்தில் 3 வயது சிறுமியை பள்ளி வேனில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர டிரைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று வர வேண்டும் என்பதற்காக அவர்களின் பெற்றோர் பள்ளி வேனை பயன்படுத்தும் சூழலில், அதில் வைத்தே ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த சிறுமியை ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்யும் போது வேனின் பெண் உதவியாளர் அங்குதான் இருந்திருக்கிறார் என்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் எலக்ட்ரிக் பைக் ஷோ ரூமில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ- 8 பேர் கருகி பலி
பள்ளி வேன் தாமதம்
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் ஒரு தனியார் 'கிண்டர் கார்டன்' பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். பெரும்பாலான குழந்தைகள் பள்ளி வேனில்தான் சென்று வருகிறார்கள். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை அப்பள்ளியில் படிக்கும் குழந்தையின் தாயார் பள்ளி வேன் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தார். ஆனால் பள்ளி வேன் வருவதற்கு சற்று தாமதமாகியுள்ளது. பின்னர், வழக்கத்தை விட 15 நிமிடங்கள் கழித்து பள்ளி வேன் அங்கு வந்துள்ளது.
துணி மாற்றப்பட்டதால் சந்தேகம்
அப்போது வேனில் இருந்து இறங்கிய தனது குழந்தையை பார்த்து அவருக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு காலையில் போட்டு அனுப்பிய துணி மாற்றப்பட்டு, ஸ்பேருக்காக வைக்கப்பட்டிருந்த துணியை குழந்தை அணிந்திருந்தாள்.
இதையடுத்து, சிறுமியிடம் யார் துணியை மாற்றிவிட்டது என அவர் கேட்டுள்ளார். ஆனால் குழந்தை சரியாக பதிலளிக்கவில்லை. மேலும், தனது பிறப்புறுப்பில் வலி உள்ளதாகவும் சிறுமி கூறினார்.
நடந்ததை கூறிய சிறுமி
இதனால் பயந்துபோன சிறுமியின் தாயார், தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு உடனே வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். கணவர் வந்த பிறகு, இருவரும் சேர்ந்து பள்ளிக்கு சென்று குழந்தைக்கு என்ன நடந்தது என விசாரித்துள்ளனர். அப்போது எந்த பிரச்சினையும் இல்லை என பள்ளி நிர்வாகத்தினர் பதிலளித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தங்கள் மகளை ஆசுவாசப்படுத்தி, அவரிடம் என்ன நடந்தது என பெற்றோர் மெதுவாக விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி, வேனில் வரும் போது ஓட்டுநர் தன்னிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்டதை கூறியிருக்கிறார்.
அடையாளம் காட்டிய சிறுமி
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக அங்கிருந்த மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு சென்றனர். மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், நேற்று அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்ற போலீஸார், அங்கு இருக்கும் ஆசிரியர்கள், ஊழியர்களை வரிசையாக நிற்க வைத்து, யார் உன்னிடம் தவறாக நடந்து கொண்டது எனக் கேட்டனர். அதற்கு அந்த சிறுமி, சரியாக வேன் டிரைவரை அடையாளம் காட்டினாள்.
கைது நடவடிக்கை
இதன் தொடர்ச்சியாக, போலீஸார் பள்ளி வேன் டிரைவர் கிஷோர் குமாரை (32) காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், வேனின் பெண் உதவியாளர் முன்னிலையிலேயே சிறுமியை அவர் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
இதனால் பாலியல் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக கூறி பெண் ஊழியரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதில் வேன் டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் படி 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க வழிவகை உள்ளது குறிப்பிடத்தக்கது.