வேற வழி தெரியல.. மத்திய பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் நிலை பரிதாபம்.. மனைவியே மார்க்கம்
போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற பதற்றத்தில் இருக்கும் ஆளும் பாஜக முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் மனைவியையும் தேர்தல் களத்தில் இறக்கி உள்ளார்.
2018-ம் ஆண்டு மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சியை அமைத்தது. ஆனால் அந்த ஆட்சியை கவிழ்த்து சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சியை அமைத்தது.

தற்போது மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நவம்பர் 17-ந் தேதி நடைபெற உள்ளது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்திக்கப் போகிறது என்கின்றன கருத்து கணிப்புகள். ஆனாலும் சளைக்காத பாஜக பகீரத பிரயத்தனத்துடன் போராடுகிறது.
சிவராஜ் சிங் சவுகான் எதிர்காலம்?: மத்திய பிரதேசத்தில் தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் அரசியல் எதிர்காலம் இப்போதே கேள்விக்குறியாகிவிட்டது. முதலில் சட்டசபை தேர்தலில் போட்டியிடவே வாய்ப்பு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக இருந்தது. ஒருவழியாக பாஜக மேலிடம் சிவராஜ் சிங் சவுகானுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுத்துவிட்டது. அடுத்ததாக, சிவராஜ் சிங் சவுகானை மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவில்லை பாஜக. ஏற்கனவே ம.பி. மக்கள் சிவராஜ் சிங் சவுகான் மீது கடும் கோபத்தில் இருக்கும் நிலையில் அவரை முன்னிறுத்த பாஜகவே தயங்குகிறது என்பதுதான் வெளிப்படை. சிவராஜ் சிங் சவுகானுக்கு பதிலாக முதல்வர் வேட்பாளர் ரேஸில் ஏராளமானோர் முன்னிறுத்தப்படுகின்றனர்.
அந்தோ பரிதாபம்: தற்போதைய தேர்தல்தான் சிவராஜ் சிங் சவுகான் அரசியல் வாழ்வின் இறுதி அத்தியாயங்களாக இருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இத்தேர்தலில் தமக்கும் அபரிதமான செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபித்தால்தான் "எடியூரப்பா" போல இன்னமும் சில காலம் பாஜகவில் சிவராஜ் சிங் சவுகானால் ஓட்ட முடியும் என்பதுதான் யதார்த்த நிலை. இதனால்தானோ என்னவோ, தற்போது தேர்தல் களத்தில் மனைவி சாதனா சிங்கை களமிறக்கிவிட்டுள்ளார் சிவராஜ் சிங் சவுகான்.
காங்கிரஸ் வாக்குறுதி: ம.பி.யில் காங்கிரஸ் கட்சி பெண்களை இலக்கு வைத்து தேர்தல் வாக்குறுதிகளை வாரி இறைத்திருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு மாதம் ரூ1,500 உதவித் தொகை வழங்கப்படும் என்ற திட்டம் பெரும் தாக்கத்தை அலைபோல ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் வேறுவழியே இல்லாமல் மனைவி சாதனா சிங் மூலம் பெண் வாக்காளர்களை கவர முடியுமா? என காலம் கடந்த ஒரு வியூகத்தை கையில் எடுத்துள்ளார் சிவராஜ் சிங் சவுகான்.

மீண்டும் முதல்வரானால்..: மத்திய பிரதேச கள நிலவரம், பாஜகவின் அழுத்தம் புரிந்தும் புரியாதவரைப் போல சாதனா சிங்கும், சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வராவார்.. அப்போது இதுவரை நிறைவேற்றாத உங்கள் குறைகள் நிறைவேற்றப்படும் என ஆறுதல் சொல்லி வாக்கு கேட்கிறார். மேலும் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்காக மேற்கொள்ளப்பட்ட சில பல திட்டங்களை சுட்டிக்காட்டியும் சாதனா சிங் வாக்கு சேகரிக்கிறார்.
கமல்நாத் மீது அட்டாக்: அதேநேரத்தில், கமல்நாத்தை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் சாதனா சிங் பேசுவது அரசியல் வட்டாரங்களில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது என்கின்றனர். தன்னுடைய ஆட்சியையே காப்பாற்ற முடியாதவர் காங்கிரஸ் கமல்நாத் என சாதனா சிங் விமர்சிக்கிறாராம். கமல்நாத் ஆட்சியை கபளீகரம் செய்துதான் சிவராஜ் சிங் சவுகான் முதல்வரானார் என்கிற பதிலையும் காங்கிரஸ் நிர்வாகிகள் சூடாக தந்தும் வருகின்றனராம். "வூட்டம்மா"வின் அறுவடை எப்படி இருக்கப் போகிறதோ?












Click it and Unblock the Notifications