1,200 கார்கள், 5,000 ஆதரவாளர்களுடன் மீண்டும் காங்கிரஸுக்கு திரும்பிய மபி எம்எல்ஏ-அதிர்ச்சியில் பாஜக!
போபால்: மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் 1,200 கார்கள், 5,000 ஆதரவாளர்களுடன் மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளார். இது பாஜகவை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் 2018-ல் காங்கிரஸ் வென்று ஆட்சியை பிடித்தது. ஆனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தை ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு கவிழ்த்தது பாஜக. இதனையடுத்து சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக வெல்லவே வாய்ப்பில்லை என்பது பெரும்பான்மையான கருத்து கணிப்புகளின் முடிவுகள். ஆனால் ஒன்றிரண்டு கருத்து கணிப்புகள், காங்கிரஸுக்கு சமமான இடத்தை பாஜக பெறலாம் என ஆறுதல் கூறியுள்ளன.
இந்நிலையில் ஜோதிராதித்யா சிந்தியாவுடன் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவுக்கு போன எம்.எல்.ஏ. சமந்தர் படேல் மீண்டும் காங்கிரஸுக்கு திரும்பியுள்ளார். காங்கிரஸில் மீண்டும் இணையும் நிகழ்வில் தமது பலத்தைக் காட்டுவதற்காக 1,200 கார்கள் புடைசூழ 5,000 ஆதரவாளர்களை திரட்டி அசத்தினார் சமந்தர் படேல். ஏற்கனவே ஜோதிராதித்யா சிந்தியாவுடன் போன சிலர் மீண்டும் காங்கிரஸுக்கே திரும்பிவிட்டனர். இந்த வரிசையில் சமந்தர் படேலும் காங்கிரஸுக்கு திரும்பி உள்ளார்.
இது தொடர்பாக சமந்தர் படேல் கூறுகையில், ஜோதிராதித்ய சிந்தியாவுடன் காங்கிரஸை விட்டு விலகினேன். ஆனால் பாஜகவில் எந்த ஒரு மரியாதையும் கொடுக்கப்படவில்லை. அதனால் தாய் கட்சியான காங்கிரஸுக்கே திரும்பிவிட்டேன். இந்த தேர்தலில் ஆளும் பாஜக படுதோல்வியைத்தான் தழுவும் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications