விதவை மறுமணத்தை ஊக்குவிக்கும் ம.பி.அரசு... ரூ.2 லட்சம் நிதி உதவி தருகிறதாம்!
விதவை மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக கணவரை இழந்த பெண்ணை மறுமணம் செய்து கொள்வோருக்கு ரூ. 2லட்சம் வழங்கப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.
போபால்: மத்திய பிரதேச அரசு விதவைகள் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக புதிய நிதியுதவி திட்டத்தை அறிவித்துள்ளது.
விதவைகள் மறுமணத்தை அதிகரிக்க மத்திய அரசு கொள்கை திட்டத்தை வகுக்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இந்த உத்தரவை முன்மாதிரியாக கொண்டு இந்த திட்டத்தை மத்திய பிரதேச அரசு கையில் எடுத்துள்ளது.

விதவை மறுமணத்துக்காக ஆண்டுதோறும் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. மாநில நிதித்துறையுடன் ஆலோசனை நடத்திய பின்னர், அமைச்சரவை ஒப்புதல் பெற்று இத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 1000 விதவைகளுக்கு மறுமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கான வரைவு அறிக்கையின்படி, பெண்ணுக்கு வயது 18 முதல் 45 வரை இருக்க வேண்டும். ஆணுக்கு இது முதல் திருமணமாகவும் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தை ஆண்கள்தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக மாநில அரசு இரு நிபந்தனைகளை விதித்துள்ளது. ஒன்று, ஆணுக்கு இது முதலாவது திருமணமாக இருத்தல் வேண்டும். திருமணம் ஆனதும் மாவட்ட ஆட்சியரகத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.
கிராம பஞ்சாயத்துகள், உள்ளாட்சிகளில் பதிவு செய்தால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. திருமணம் முடிந்த பின்னர், அந்த நபருக்கு 2 லட்சம் ரூபாய் தொகை வழங்கப்படும். இந்த திட்டம் இன்னும் 3 மாதங்களில் ஒப்புதல் பெறப்படும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications