காணாமல் போன மாஸ்க்.. காற்றில் பறந்த சமூக இடைவெளி.. ஜெயின துறவியை வரவேற்க குவிந்த "மாஸ் ம.பி."
போபால்: மத்திய பிரதேசத்திற்கு வருகை தந்த ஜெயின மதத் துறவியை வரவேற்க சமூக விலகலை உதறி தள்ளிவிட்டு மாஸ் அளவிலான கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் சமூக இடைவெளி முக்கியம் என அரசும் மருத்துவ நிபுணர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்ட போதிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அது போல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது, அரசு விதிகளை மதிக்காதது போன்றவை இருந்தால் தளர்வுகள் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜெயின மத துறவி
இந்த நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் சாகர் மாவட்டத்திற்கு வந்த ஜெயின மத துறவியை வரவேற்க பொதுமக்கள் ஒன்று கூடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாகர் மாவட்டத்தில் உள்ள பாண்டா நகரத்திற்கு முனி பிரனாம் சாகர் தலைமையில் ஜெயின மத துறவிகள் குழு திங்கள்கிழமை வருகை தந்தனர்.

விசாரணை
அப்போது அவரை வரவேற்க பெருங்கூட்டம் கூடியது. மக்கள் யாரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் முகக் கவசம் அணியாமலும் திரண்டனர். இந்த வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வழக்கு
இதுகுறித்து கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் பிரவீன் புரியா கூறுகையில் பாதுகாப்பு உத்தரவுகளை மீறும் செயல் இது. வீடியோக்களை ஆராய்ந்த பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 400 முதல் 500-க்கும் மேற்பட்ட மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றார் அவர்.

பாதிப்பு
மத்திய பிரதேசத்தில் 4,173 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 2004 பேர் குணமடைந்துள்ளனர். 232 பேர் பலியாகிவிட்டனர். இப்படிப்பட்ட நிலையில் இதுபோல் மக்கள் மாஸாக கூடுவது கொரோனா அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. அந்த கூட்டத்தில் ஒருவருக்கு பாதிப்பு இருந்தாலும் நிலைமை மோசமாகும் சூழலை மறந்து இவர்கள் கூடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications