காங்கிரசுக்கு ‛முட்டை’.. ம.பி.யை மொத்தமாக ஸ்வீப் செய்த பாஜக! சிந்தியா - சவுகான் அமோக வெற்றி
போபால்: லோக்சபா தேர்தலில் கடந்த முறை மத்திய பிரதேசத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்தியது. அதேபோல் இந்த முறையும் அனைத்து தொகுதிகளிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள 29 தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி படுதோல்வியடைந்துள்ளது. இங்கு மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அமோக வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸின் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், கமல்நாத் மகன் நகுல் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மத்திய பிரதேசம் என்பது பாஜகவின் கோட்டையாக உள்ளது. கடந்த 2003 முதல் தற்போது வரை (இடையே 2018 டிசம்பர் முதல் 2020 மார்ச் வரை மட்டும் காங்கிரஸ் ஆட்சி) பாஜக ஆட்சி நடந்து வருகிறது. தற்போது மோகன் யாதவ் என்பவர் முதல்வராக உள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. 230 தொகுதிகளில் பாஜக 163, காங்கிரஸ் 66 இடங்களில் வென்றது. இந்த தேர்தலில் கடந்த முறையை விட பாஜக 54 இடங்களில் அதிகமாக வென்ற நிலையில் காங்கிரஸ் 48 இடங்களை பறிகொடுத்தது.
இந்நிலையில் தான் தற்போது லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 29 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு 29 தொகுதிகளில் பாஜக தனித்து களமிறங்கி உள்ளது. காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், ஒரு தொகுதியில் அதாவது கஜுராஹோ தொகுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியும் போட்டியிட்டது.
ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 மற்றும் மே 13 என 4 கட்டங்களாக 29 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில் முதல் கட்டத்தில் 67.75%, 2ம் கட்டத்தில் 58.59%, 3ம்கட்டத்தில் 66.75% மற்றும் 4ம் கட்டத்தில் 72.05% ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகள் இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் யார் வெல்வார்கள் என்பது இன்று தெரிந்துவிடும்.
இந்நிலையில் தான் முதலில் தபால் ஓட்டு முதல் தொடர்ந்து 29 தொகுதிகளிலம் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. இதனால் மத்திய பிரதேசத்தின் 29 தொகுதிகளிலும் பாஜக வெல்லும் நிலை உருவானது. தொடக்கம் முதலே பாஜக தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
இந்நிலையில் தான் கடைசியில் 29 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியான மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா 5.40 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் குணா தொகுதியில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் ஜோதிராதித்ய சிந்தியா 9 லட்சத்து 23 ஆயிரத்து 302 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யாத்வேந்தர் ராவ் 3 லட்சத்து 82 ஆயிரத்து 373 ஓட்டுகள் மட்டுமே பெற்று 5 லட்சத்து 40 ஆயிரத்து 929 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
விதிஷா தொகுதியில் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் 8.21 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் சிவ்ராஜ் சிங் சவுகான் 11 லட்சத்து 16 ஆயிரத்து 460 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கி காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் பானு சர்மா 2 லட்சத்து 95 ஆயிரத்து 52 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
அதேபோல் முன்னாள் முதல்வரான காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் ராஜ்கார் தொகுதியில் தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் 7 லட்சத்து 58 ஆயிரத்து 783 ஓட்டுகள் பெற்றார். திக்விஜய் சிங் 6 லட்சத்து 12 ஆயிரத்து 654 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார்.
காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் சிந்த்வாரா தொகுதியில் தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் புட்னி விவேக் சாகு 6 லட்சத்து 44 ஆயிரத்து 738 ஓட்டுகள் வாங்கினார். கமல்நாத்தின் மகன் நகுல் நாத் 5 லட்சத்து 31 ஆயிரத்துக்கு 120 ஓட்டுகள் மட்டுமே பெற்று 1 லட்சத்து 13 ஆயிரத்து 738 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
மேலும் இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி தனது வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜகவில் ஐக்கியமானார். இதனால் பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானி காங்கிரஸ் அல்லாத பிற வேட்பாளர்களுடன் மோதிய சங்கர் லால்வானி வெற்றி பெற்றார்.
சங்கர் லவானி இந்த தொகுதியில் 12 லட்சத்து 26 ஆயிரத்து 751 ஓட்டுகளை பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களின் பகுஜன் சமாஜ் கட்சியின் சஞ்சய் 51,659 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 674 ஓட்டுகள் பெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் மனுவை ராஜினாமா செய்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் நோட்டாவுக்கு ஓட்டளித்தனர். இதனால் தொகுதியில் நோட்டா 2வது இடம் பிடித்தது.
முன்னதாக கடந்த 2014 லோக்சபா தேர்தலில் 27 இடங்களிலும், 2019ல் 28 இடங்களிலும் பாஜக வென்று இருந்தது. 2014ல் காங்கிரஸ் 2 இடங்களிலும், 2019ல் ஒரு இடத்திலும் வென்று இருந்தது. இந்த முறையும் பாஜக தான் ஆதிக்கம் செலுத்தும், பாஜகவுக்கு 28 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. ஆனால் கருத்து கணிப்புகளை தாண்டி காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும் என காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில் அந்த கட்சிக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. மாறாக 29 தொகுதிகளிலும் பாஜக வென்று அசத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications