விஜயின் நண்பன் பட பாணி.. தெரியாத வீட்டுக்கு விருந்தாளியாக போன எம்பிஏ மாணவர்.. அடுத்து நடந்த பரிதாபம்
போபால்: திருமண நிகழ்ச்சியில் அழையா விருந்தாளியாக சென்று சாப்பிட்ட எம்பிஏ மாணவரை அங்குள்ளவர் பிடித்து பாத்திரம் கழுவ வைத்த சம்பவம் பெரும் விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.
ஒரு வேளை சோறு சாப்பிட்டதற்காக படித்த இளைஞன் என்றும் பார்க்காமல், அவரை பாத்திரம் கழுவ வைத்ததுடன், அதை வீடியோவும் எடுத்து வெளியிட்டு அவமானப்படுத்தியுள்ளனர் அந்த "பெரிய" மனிதர்கள்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியதை அடுத்து, அந்த இளைஞர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அந்த திருமண வீட்டார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விடுதியில் படிக்கும் மாணவர்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 30-ம் தேதி நடைபெற்றது. தனியாருக்கு சொந்தமான பெரிய தோட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதை அந்த வழியாக சென்ற எம்பிஏ மாணவர் ஒருவர் பார்த்திருக்கிறார். அங்குள்ள ஒரு கல்லூரி விடுதியில் தங்கி பயிலும் அந்த மாணவருக்கு, அப்போது நல்ல பசியும் இருந்துள்ளது. இதனால், திருமண நிகழ்ச்சியில் சாப்பிட முடிவு செய்தார்.

பாதி பந்தியிலேயே..
பின்னர் பந்தி நடைபெறும் இடத்துக்கு சென்ற அந்த மாணவருக்கு சாப்பாடும் பரிமாறப்பட்டது. ஆனால் அவர் சாப்பிடத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அந்த திருமண வீட்டுக்காரர்கள் சந்தேகத்தின் பேரில் அந்த மாணவனிடம் யார், என்ன என்று விசாரித்துள்ளனர். அப்போது அந்த மாணவர், மாப்பிள்ளை - பெண் வீட்டார் யாருக்கும் உறவினர் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மாணவரை அனைவரின் முன்னிலையிலும் திட்டிய அவர்கள், பாதி சாப்பிட்டிலேயே அவரை அங்கிருந்து இழுத்துச் சென்றனர்.

எச்சில் பாத்திரங்களை கழுவ வைத்து..
பின்னர் அந்த மாணவரை சமையல் அறைக்கு கொண்டு சென்ற அவர்கள், அங்கிருந்த எச்சில் பாத்திரங்களை கழுவுமாறு கூறியுள்ளனர். ஏற்கனவே, பந்தியில் அவமானப்பட்டு கூனிக்குறுகி நின்ற அந்த மாணவரும், எதுவும் பேசாமல் பாத்திரங்களை கழுவ தொடங்கினார். அப்போது, திருமண வீட்டார் ஒருவர், அவர் பாத்திரம் கழுவுவதை செல்போனில் வீடியோ எடுத்தார். தொடர்ந்து, அவர் ஏதோ செய்யக்கூடாத குற்றத்தை செய்தது போல, அவரது பெயர், எந்த ஊர், எந்தக் கல்லூரி என விசாரிக்கிறார். அந்த மாணவனும் அதற்கு பதிலளிக்கிறார். பின்னர் அவர் எச்சில் பாத்திரம் கழுவுவது எப்படி இருக்கிறது என கேட்க, அந்த மாணவனோ, "பணம் கொடுக்காமல் சாப்பிட்டதற்காக இந்த வேலையை செய்கிறேன்.. எல்லாம் வேலைதானே" என சொல்கிறார்.

வீடியோ வெளியிட்டதால் வழக்கு
பசிக்கு சாப்பிட வந்தவரை பிடித்து, பாத்திரமும் கழுவ வைத்தாகிவிட்டது. அத்துடன் இந்த விஷயத்தை திருமண வீட்டார் விட்டிருக்கலாம். ஆனால், அந்த மாணவன் பாத்திரம் கழுவும் வீடியோவை அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். ஆனால் அவர்கள் என்ன நினைத்து வெளியிட்டார்களோ அது நடக்கவில்லை. மாறாக, ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டதற்காக கல்லூரி மாணவன் என்றும் பாராமல் இந்த கீழ்த்தரமான செயலை செய்ய வைத்த திருமண வீட்டாருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், வீடியோ வெளியிட்டு தன்னை அவமானப்படுத்திவிட்டதாக கூறி அந்த மாணவன் போலீஸில் புகார் அளிக்கவே, தற்போது திருமண வீட்டார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications