அந்த 12 எம்எல்ஏக்கள் எங்களோடு வருவாங்க.. காங்கிரஸ் நம்பிக்கை.. ம.பி. அரசியலில் பரபரப்பு!
போபால்: மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா பாஜகவில் இணைந்துள்ளதுடன் அவருக்கு ஆதரவாக 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளதால் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழும் அபாயத்தில் உள்ளது. இந்நிலையில் 22 பேரில் 12 பேர் தங்கள் பக்கம் வருவார்கள் என்று காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா கமல் நாத் முதல்வராக தொடர்வதற்கு போர்க்கொடி உயர்த்தினார். அத்துடன் தனக்கு ஆதரவான எம்எல்ஏக்களை பெங்களூருக்கு அழைத்து சென்று தங்க வைத்துள்ளார். அத்துடன் அவர் நேற்று பிரதமர் மோடி அமித்ஷா ஜேபி நட்டாஉள்ளிட்டோரை சந்தித்தார்.
மறுபுறம் 22 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்தனர். அதேநேரம் ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார் .இன்று பாஜகவில் அக்கட்சியின் தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் இணைந்துள்ளார்.

காங்கிரஸ் பலம் சரிவு
சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் உதவியுடன் பாஜக எந்த நேரமும் சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் சூழல் நிலவுகிறது. இப்போதைக்கு கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு ஆட்சியை தக்கவைக்க 104 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 95 எம்எல்ஏக்கள் பலமே உள்ளது.

எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு
இதனால் இருக்கும் 95 எம்எல்ஏக்களையும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்குப் பாதுகாப்பாக அனுப்பும் பணியில் காங்கிரஸ் அரசு இறங்கியுள்ளது. இதற்காக 95 எம்எல்ஏக்களும் சொகுசு பஸ்கள் மூலம் போபால் விமான நிலையத்துக்கு அழைத்து சென்று அங்கிருந்து ஜெய்ப்பூருக்கு அழைத்து சென்றது.

பாஜக பலம்
228 உறுப்பினர்கள் கொண்ட மத்தியப்பிரதேச சட்டப்பேரவையில் 22 எம்எல்ஏக்கள் பதவி விலகி உள்ளதால் 206 ஆக சட்டசபை எம்எல்ஏக்களின் பலம் சரிந்துவிட்டது. தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 104 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால் காங்கிரஸ் கட்சியிடம் 95 எம்எல்ஏக்களும், பாஜகவிடம் 107 எம்எல்ஏக்களும் உள்ளனர். இந்நிலையில் 22 பேரின் ராஜினாமா இதுவரை ஏற்கப்படாத நிலையில் . ஜோதிராதித்ய சிந்தியாவிடம் இருக்கும் எம்எல்ஏக்கள் 12 பேர் ஆதரவு தெரிவிப்பார்கள் என காங்கிரஸ் நம்பிக்கையில் உள்ளது.

காங்கிரஸ் நம்பிக்கை
மத்தியப் பிரதேச அமைச்சர் கமலேஸ்வர் படேல் இது குறித்து பேசுகையில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேணடிய நிலை வந்தால் நிச்சயம் பெரும்பான்மையை நிரூபிப்போம். ஜோதிராதித்யா சிந்தியாவுடன் இருக்கும் எம்எல்ஏக்களில் 12 பேர் எங்களுக்கு ஆதரவாக உள்ளார்கள். தவறான வழிகாட்டலில் அவர்கள் அங்கு தங்கியிருக்கிறாரகள். தேவைப்படும் போது பெரும்பான்மையை ஆதரிக்க ஆதரவு தருவார்கள். சுயேச்சை எம்எல்ஏக்கள், பிஎஸ்பி, சமாஜ்வாதி எம்எல்ஏக்களும் எங்களை ஆதரிப்பார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications