ம.பி. கோவில் கூட்ட நெரிசல்: குழந்தைகளை உயிருடன் ஆற்றில் வீசிய போலீசார்

மத்திய பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் பலியாகினர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த தாதியாவைச் சேர்ந்த போலீஸ் கிராம் ரக்ஷா சமிதி உறுப்பினரான ராஜுஸ்ரீ யாதவ் கூறுகையில்,
போலீசார் உடல்களையும், காயம் அடைந்தவர்களையும், உயிருடன் இருக்கும் குழந்தைகளையும் தூக்கி ஆற்றில் வீசுவதாக பக்தர்கள் சத்தம் போட்டனர். இதையடுத்து ஆற்றில் இருந்து 1 குழந்தையை மீட்டேன். மேலும் 5 குழந்தைகளை மீட்டேன். 5 குழந்தைகளை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டேன். 2 வயது குழந்தை மட்டும் என்னிடம் உள்ளது. அதன் பெற்றோர் யார் என்று தெரியவில்லை என்றார்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், இது உண்மை என்று தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிபி நந்தன் குமார் துபே தெரிவித்தார்.
ராஜுஸ்ரீயின் உறவினர் கமல் கிஷோர் பிரஜபதி(21) கூறுகையில், ஆற்றில் மூழ்கவிருந்த சிறுவனை நாங்கள் காப்பாற்றி அவனின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தோம். அவனை யார் ஆற்றில் வீசியது என்று தெரியவில்லை என்றார்.
தாங்கள் யாரையும் ஆற்றில் வீசவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் ஆற்றில் பல கிலோமீட்டர் தூரம் வரை பிணங்கள் மிதந்தன.
தாதியாவைச் சேர்ந்த இன்டெல் அஹ்ரிவார்(32) கூறுகையில், காக்கி உடை அணிந்த ராட்சசர்கள் அவர்கள். போலீசார் குழந்தைகளை தூக்கி ஆற்றில் வீசியதை பார்த்தேன். மேலும் அவர்கள் 3 டிரக்குகள் நிறைய உடல்களை ஏற்றி எங்கோ எடுத்துச் சென்றனர். சம்பவ இடத்தில் 175 உடல்கள் கிடந்ததை நான் பார்த்தேன். இதை நீதிமன்றத்தில் வந்து கூறவும் தயார் என்றார்.
நெரிசலில் சிக்கி பலியான 5 வயது தம்பியின் உடலை வாங்கச் சென்றபோது போலீசார் தன்னை பாலத்தில் இருந்து தள்ளிவிட்டதாக ஆசிஷ் அஹிர்வார்(15) என்பவர் தெரிவித்தார்.
எனது மச்சானின் உடலை தேடிக் கொண்டிருந்தபோது போலீசார் 24 பக்தர்களை ஆற்றுக்குள் வீசினர். அதில் சிலர் உயிருடன் இருந்தனர் என்று கீதா மிஷ்ரா(55) என்பவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications