"நீ எப்படி விவசாயம் பண்ணலாம்!" பழங்குடி பெண்ணுக்கு தீ வைத்து.. அதை வீடியோ எடுத்து வெளியிட்ட கொடூரம்
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவருக்கு ஒடுக்கப்படும் சம்பவங்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இளம் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள்..அதன் பின் அவர்கள் செய்த காரியம் கொடூரத்தின் உச்சம்
இருந்த போதிலும், நாட்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் முழுமையாக நின்றபாடு இல்லை.
மத்தியப் பிரதேசம்
இந்தச் சூழலில் மத்தியப் பிரதேசத்தில் குணா மாவட்டத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிருடன் தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் ஒரு பழங்குடியின குடும்பத்திற்கு அரசுத் திட்டத்தில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த நிலத்தைச் சிலர் ஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த 38 வயதான ராம்பியாரி சஹாரியா என்ற பெண் அவர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
தீ வைப்பு
இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் மூவர், வயலில் வைத்தே ராம்பியாரி சஹாரியாவபக்கு தீ வைத்துள்ளனர். இதனால் அந்தப் பெண் கதறித் துடித்துள்ளார். அப்போதும் கூட அந்த கொடூர எண்ணம் கொண்டவர்கள், ராம்பியாரி சஹாரியா கதறித் துடிப்பதை வீடியோவாக எடுத்துள்ளனர். மேலும், இதை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து உள்ளனர். இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகார்
இந்தச் சம்பவத்தில் ராம்பியாரி சஹாரியாவுக்கு மிக மோசமான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீஸ் எஸ்பி பங்கஜ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "கடந்த சனிக்கிழமை அர்ஜுன் சஹாரியா தனது மனைவி தீக்காயங்களுடன் வயலில் இருப்பதைப் பார்த்து உள்ளார். அதன் பின்னர் அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
என்ன பிரச்சினை
சில ஆண்டுகளுக்கு முன்பு, நலத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 6 பிகாஸ் நிலத்தில் சஹாரியாவின் குடும்பத்தினர் விவசாயம் செய்துள்ளனர். இதனால் அவர்கள் ஆத்திரமடைந்து தீ வைத்துள்ளனர். பெண்ணுக்கு தீ வைத்த மூவரும் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும். அந்த மூவரும் சஹாரியாவுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து உள்ளனர். இது தொடர்பாக சஹாரியா குடும்பத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
வழக்குப்பதிவு
அதில் தான் மாவட்ட நிர்வாகத்தினர் தலையிட்டு நிலத்தை மீண்டு கொடுத்துள்ளனர். இதன் காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் எஃப்ஐஆரில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இரண்டு பேரை ஏற்கனவே கைது செய்துவிட்டோம். தலைமறைவாகவே உள்ள மற்றொரு நபரைத் தேடி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
கண்டனம்
இந்தச் சம்பவத்திற்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இந்த சம்பவம் தொடர்பாக மத்தியப் பிரதேச பாஜக அரசை விமர்சித்தார். இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "குடியரசுத் தலைவர் தேர்தலுக்குத் திரௌபதி முர்முவை முன்னிறுத்தும் ஒரு கட்சி பழங்குடியினப் பெண்ணுக்கு இத்தகைய கொடூரமான கொடுமையை அனுமதிக்கிறது. வெட்கக்கேடானது" என்று சாடி உள்ளார்.