"நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்".. ஹெல்மெட் போட்டு தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் நபர்.. வீடியோ
போபால்: மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணிந்தபடி தள்ளுவண்டியில் காய்கறி விற்று வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
போலீஸார் விதிக்கும் 'திடீர்' அபராதங்களுக்கு பயந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். போலீஸார் மீதான பயத்தில் போட்ட ஹெல்மெட்டே, தற்போது அவரை அந்தப் பகுதியில் மிகவும் பிரபலம் அடையச் செய்துள்ளது.
'ஹெல்மெட் வாலா' என்ற செல்லப் பெயரும் அவருக்கு கிடைத்துள்ளது. அவரிடம் காய்கறி வாங்கவும், அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளவும் இளைஞர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

போலீஸும் அபராதமும்..
மக்களின் நன்மைக்காகவும், சாலை விபத்துகளை தடுப்பதற்காகவும் அரசாங்கம் இயற்றும் சட்டத்தை காவல்துறையினர் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். உதாரணமாக, இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிவது; இரண்டு பேருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடாது, அதிவேகமாக வாகனங்களை இயக்கக்கூடாது என்பன போன்ற விதிமுறைகளை போலீஸார் செயல்படுத்துகின்றனர். இருந்தபோதிலும், இந்த விதிமுறைகளை சிலர் கடைப்பிடிப்பதில்லை. இதுபோன்ற நபர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக போலீஸார் அபராதம் விதிக்கின்றனர்.

அலற வைக்கும் அபராதங்கள்..
அதே சமயத்தில், இந்த அபராதம் விதிக்கும் நடைமுறையில் சில போலீஸார் குளறுபடியில் ஈடுபடுவதால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கெட்ட பெயர் வந்துவிடுகிறது. குறிப்பாக, குழந்தையுடன் சேர்த்து 3 பேராக வந்த மோட்டார் சைக்கிளுக்கு போலீஸார் அபராதம் விதித்த நிகழ்வு தமிழகத்திலேயே நடைபெற்றது. இன்னும் பல இடங்களில், முறையான ஆவணங்கள் இருந்தபோதிலும் ஏதாவது காரணத்தை சொல்லி அபராதம் விதிக்கும் போலீஸார் இருக்கவே செய்கின்றனர். இது பொதுமக்களுக்கு ஆத்திரத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.

ஹெல்மெட்டுடன் காய்கறி வியாபாரம்
இந்நிலையில், இதுபோன்ற போலீஸாரிடம் சிக்கியதாலோ என்னவோ, மத்திய பிரதேசத்ததை சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவர் நூதனமான ஐடியாவை கடைப்பிடித்து வருகிறார். மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சில மாதங்களாகவே தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணிந்தபடியே வந்து செல்கிறார். இது அப்பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. சிலர் அவருடன் சேர்ந்து புகைப்படம், வீடியோ எடுக்கும் அளவுக்கு அவர் ஃபேமஸ் ஆகியுள்ளார்.

அபராதத்தை தவிர்க்க..
இதனிடையே, தலையில் ஹெல்மெட்டுடன் தள்ளுவண்டியில் அவர் செல்லும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "காய்கறி விற்பதற்கான ஆவணங்கள் என்னிடம் சரியாக உள்ளது. ஆனால் தினம் தினம் ஏதாவது காரணத்தை கூறி போலீஸார் அபராதம் வசூலிக்கின்றனர். எனவேதான் ஹெல்மெட் அணிந்தபடி காய்கறி விற்க தொடங்கினேன். ஒருவேளை, ஹெல்மெட் இல்லை என்பதற்காக என்னிடம் போலீஸார் அபராதம் கேட்கலாம் அல்லவா.. இதனை தவிர்க்கவே ஹெல்மெட் அணிந்திருக்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications