ஒரு டேபிள் ஃபேன்.. ஒரு குண்டு பல்பு.. இதுக்கு கரண்ட் பில் ரூ.2.50 லட்சமாம்.. அதிர்ந்து போன பெண்!
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் குடிசை வீட்டில் வாழும் பெண்ணுக்கு ரூ.2.50 லட்சம் மின்கட்டணம் வந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது.
அந்த மாநிலம் குணா மாவட்டத்தில் வசித்து வருபவர் ரம்பாய் பிரஜாபதி. 65 வயதான அவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். அக்கம்பக்கத்தில் வீட்டு வேலை செய்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.

மின் கட்டணம் ரூ.2.50 லட்சம்
இந்த நிலையில் ரம்பாய் பிரஜாபதி குடிசை வீட்டின் இந்த மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.2.50 லட்சம் என வந்தது. இந்த மின் கட்டணத்தை பார்த்ததும் ரம்பாய் பிரஜாபதிக்கு தூக்கி வாரிப் போட்டது. ஏனெனில் அவரது குடிசை வீட்டில் ஒரு பல்பு, ஒரு டேபிள் ஃபேன் மட்டுமே இருக்கிறது. இந்த இரண்டுக்குமான மின் கட்டணம் இரண்டரை லட்சமாக என அவர் அதிர்ந்து போய் விட்டார்.

2 மாதம் செலுத்தவில்லை
ரம்பாய் பிரஜாபதிக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.300 முதல் ரூ.500 வரை மின் கட்டணம் வரும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அவரால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மின் கட்டணம் செலுத்த முடியவில்லை. இந்த நிலையில்தான் இந்த மாதம் ரூ 2.50 லட்சம் கட்டணம் வந்துள்ளது. இந்த அநியாய மின் கட்டணம் குறித்து புகார் செய்ய மின்வாரிய அலுவலகம் சென்றார் ரம்பாய் பிரஜாபதி.

அதிகாரிகள் கேட்கவில்லை
ஆனால் தினமும் வீட்டுக்கும், மின்வாரிய அலுவலகத்துக்கும் நடந்ததுதான் மிச்சம். அவரது கோரிக்கையை என்னவென்று கூட அதிகாரிகள் கேட்கவில்லை.மூத்த அதிகாரிகளை பார்க்க வேண்டும் என்று கூறியபோதும் அவரை யாரும் அனுமதிக்கவில்லையாம்.

சோகம் வடிக்கும் பெண்
''மற்றவர்களின் வீடுகளில் பணிப்பெண்ணாக வேலை செய்வதன் மூலம்தான் பிழைப்பை ஓட்டி வருகிறேன். எனது வீட்டில் ஒரு பல்பு மற்றும் ஒரு டேபிள் ஃபேன் உள்ளது. ஆனால் மின் கட்டணமோ ரூ.2.50 லட்சமாக உள்ளது, நான் கடந்த பல நாட்களாக மின்சார வாரிய அலுவலகத்துக்கு வருகிறேன். ஆனால் கேட்கதான் யாரும் இல்லை'' என்று சோகத்துடன் கூறுகிறார் ரம்பாய் பிரஜாபதி.












Click it and Unblock the Notifications