பலாத்காரம் செய்ய முயன்று இளம்பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட 2 பேர்
போபால்: மத்திய பிரதேசத்தில் டெல்லியைச் சேர்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று அவர் எதிர்க்கவே ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் டெல்லியில் வேலை பார்த்து வருகிறார். அவர் டெல்லியில் இருந்து ரயில் மூலம் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜெய்னில் உள்ள பிரபலமான கோவில் ஒன்றுக்கு சென்றார். எஸ்-7 பெட்டியில் பயணம் செய்த அவர் இன்று காலை 6 மணிக்கு மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள பீனா ரயில் நிலையத்தில் இருந்து 25 கிமீ தொலைவில் தண்டவாளத்தில் மயக்கமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை முதலில் சாகரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னல் மேல் சிகிச்சைக்காக அவர் போபாலில் உள்ள ஹமீதியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது உடலின் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
அந்த பெண்ணை சக பயணிகள் இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று அவரை தாக்கி, அவரது நகை, உடைமைகளை திருடிக் கொண்டு அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.