கள்ளக்குறிச்சி பள்ளியை திறக்கலாமா.. வேண்டாமா? தமிழக அரசிடம் அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்
கள்ளக்குறிச்சி: கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறக்க அனுமதிக்கலாமா என்பது தொடர்பான கருத்துக்களுடன் நவம்பர் 25ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில், பள்ளியை திறப்பது குறித்து அரசிடம் உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
அரசு வழங்கும் அறிக்கையை பொறுத்து பள்ளியை திறப்பது தொடர்பான அடுத்தக்கட்ட உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையை மையமாக வைத்து கிளப்பிவிடப்படும் மதவெறுப்பு வதந்திகள்..போலீஸ் கமிஷனர் கடும் எச்சரிக்கை
மாணவி மரணமும் கலவரமும்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற ப்ளஸ் டூ மாணவி கடந்த ஜூலை மாதம் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோரும், ஊர் மக்களும் பள்ளி நிர்வாகத்தை அணுகினர். ஆனால், பள்ளி நிர்வாகம் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் நூற்றுக்கணக்கானோர் ஜூலை 17-ம் தேதியன்று பள்ளி வளாகத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், பள்ளி பஸ்கள், உடைமைகள் சூறையாடப்பட்டன. பல பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, பள்ளி காலவரையின்றி மூடப்பட்டது.
திறக்கக் கோரி பள்ளி சார்பில் மனு..
இதனிடையே, பள்ளி இவ்வாறு காலவரையின்றி மூடப்பட்டதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக பெற்றோர் தரப்பிலும், ஊர் மக்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோரும், பள்ளியை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அதே சமயத்தில், பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த குழுவும் ஆய்வு செய்து முடித்துள்ளதாகவும் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
முழுமையாக திறக்க தயார்..
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 9 முதல் 12ம் வகுப்பு வரை ஒரு மாத காலத்திற்கு நேரடியாக வகுப்புகளை தொடங்க அனுமதிப்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி முழுமையான அளவில், அதாவது எல்கேஜி முதல் வகுப்புகளை துவங்க தயாராக உள்ளதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசுக்கு நோட்டீஸ்..
அதேபோல, மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பள்ளியை மீண்டும் திறப்பது தொடர்பாக அரசின் கருத்துக்களை கோரியுளளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அரையாண்டு மற்றும் இறுதித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டியுள்ளதால், பள்ளியை மீண்டும் திறப்பது குறித்த கருத்துக்களுடன் நவம்பர் 25-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வரும் 25ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.