அல்-கொய்தாவுடன் தொடர்பு: பெங்களூர் மதரசா ஆசிரியரை கைது செய்த டெல்லி போலீஸ்
டெல்லி: அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பெங்களூரை சேர்ந்த மதரசா ஆசிரியரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரை சேர்ந்த மதரசா பள்ளியின் ஆசிரியர் மவுலானா அன்சார் ஷா என்பவர் நேற்று டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் தீவிரவாதிகளை தேடி பிடித்து வரும் டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரின் மற்றொரு ஆபரேசனாக இது கூறப்படுகிறது.
மவுலானா அன்சார் ஷாவை பெங்களூரில் நேற்று கைது செய்த போலீசார், அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தியபிறகு, டெல்லி அழைத்துச் சென்றுள்ளனர்.
மவுலானாவுக்கு ஜனவரி 20ம் தேதிவரை போலீஸ் காவல் வழங்கியுள்ளது கோர்ட். இந்திய துணைக் கண்டத்தில், அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தை ஆரம்பிக்கும் நோக்குடன் செயல்படும் கூட்டத்தோடு, மவுலானாவுக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.
அல்-கொய்தா இயக்கத்தினரை மவுலானா சந்தித்து உள்ளார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கிடைத்த தகவலை கொண்டு மவுலானா கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.