ரூ.640 கோடி நஷ்ட ஈடு வழக்கு: நெஸ்ட்லே நிறுவனத்திற்கு தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் நோட்டீஸ்
டெல்லி: ரூ.640 கோடி நஷ்ட ஈடு கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க நெஸ்லே நிறுவனத்திற்கு தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முறையற்ற வணிக நெறிமுறைகள், நுகர்வு பொருட்கள் குறித்து தவறான தகவலை அளித்தது உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கவும் நெஸ்லே நிறுவனத்திற்கு நுகர்வோர் தீர்ப்பாயம் வலியுறுத்தியுள்ளது.
மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்கள் மீது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஆய்வக சோதனை மேற்கொண்டன.

அப்போது அவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நூடுல்ஸ்கள் பாதுகாப்பற்றவை மற்றும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பவை என்றும் கூறி மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் தடை செய்தது.
இந்நிலையில் சட்டம் இயற்றப்பட்டு 30 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்பிரிவை (Section 12-1-D) முதல் முறையாக நெஸ்லே நிறுவனம் மீது பயன்படுத்தி தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் (NCDRC) வழக்கு தொடர்ந்துள்ளது மத்திய அரசு. ரூ.640 கோடி நஷ்ட ஈடும் கேட்டுள்ளது மத்திய அரசு.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு, தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முறையற்ற வணிக நெறிமுறைகள், நுகர்வு பொருட்கள் குறித்து தவறான தகவலை அளித்தது உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்க கோரி நெஸ்லே நிறுவனத்திற்கு நுகர்வோர் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி நாடு முழுவதும் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை மும்பை உயர்நீதிமன்றம், கடந்த 13ம் தேதி சில நிபந்தனைகளுடன் நீக்கிய நிலையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications