புனே பிலிம் இன்ஸ்டிடியூட் தலைவராக 'பி கிரேட்' பட நடிகர் கஜேந்திர சவுகான்- மாணவர்கள் ஸ்டிரைக்!!
மும்பை: புனேவில் உள்ள புகழ்பெற்ற பிலிம் இன்ஸ்டிடியூட் தலைவராக பி கிரேட் பட நடிகர் கஜேந்திர சவுகானை மத்திய அரசு நியமித்ததை எதிர்த்து ஒரு மாத காலமாக மாணவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. அத்துடன் கஜேந்திர சவுகானின் அரசல் புரசலான சினிமா பட காட்சிகளை இணைத்து மாணவர்கள் ஆவணப் படம் ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
புனே பிலிம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் ஆட்சிக்குழுவின் தலைவராக நடிகரும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான கஜேந்திர சவுகானை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கடந்த மாதம் 9-ந் தேதி நியமித்தது.
இவர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில், யுதிஷ்டிரர் கதாபாத்திரத்தில் நடித்தவர். அத்துடன் பிரதமர் நரேந்திர மோடிக்காக லோக்சபா தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டவர்.
ஆபாச நடிகர்
மேலும் கஜேந்திர சவுகான் நிறைய இந்தி படங்களில் செக்ஸ் காட்சிகளில் படு ஆபாசமாக நடித்தவர்.. இந்த சவுகானை நியமித்ததில் பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கலாசார அமைப்பான 'சன்ஸ்கார் பாரதி' நிர்வாகிகள் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லிக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
ஒரு மாத போராட்டம்
கஜேந்திர சவுகானை நியமித்து மத்திய அரசு அறிவித்தது முதலே மாணவர்கள் கடந்த ஒரு மாத காலமாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கஜேந்திர சவுகான் நடித்த செக்ஸ் காட்சிகள், பலாத்கார சாமியார் ஆசாராம் பாபுவுடன் இணைந்து டான்ஸ் ஆடும் காட்சிகள் உள்ளிட்டவற்றை இணைத்து ஒரு ஆவணப்படத்தையும் மாணவர்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அனைவருமே ஆர்.எஸ்.எஸ்.
அத்துடன் கஜேந்திர சவுகான் மட்டுமின்றி மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒட்டுமொத்த புனே பிலிம் இன்ஸ்டிடியூட் ஆட்சிக் குழுவுமே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரே என்றும் மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த ஆட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள அனகா கெய்சாஸ் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்; நரேந்திர பதக், மகாராஷ்டிரா மாநில பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யின் தலைவர்; பிரன்ஜல் சைகியா, ஆர்.எஸ்.எஸ்-ன் சன்ஸ்கார் பாரதியின் நிர்வாகி; ராகுல் சோலாபுர்கார்- ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் எனவும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கஜேந்திர சவுகான் மறுப்பு
புனே இன்ஸ்டிடியூட் வளாகம் முழுவதும் 'கஜேந்திரா ராஜினாமா செய்துவிட்டு வெளியேறு" என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் கஜேந்திர சவுகானோ, நான் பாரதிய ஜனதாவில் 10 ஆண்டுகாலமாகத்தான் இருக்கிறேன்; அதே நேரத்தில் திரைத்துறையில் 35 ஆண்டுகாலம் இருக்கிறேன் என்பதை மாணவர்கள் உணராமல் இருக்கின்றனர் என்று குமுறியுள்ளார்.