வயலில் நுழைந்த ஆடு: பீகாரில் தலித் சிறுவனை உயிருடன் எரித்துக் கொன்ற உயர் ஜாதியினர்
பாட்னா: பீகாரில் ஆடுகள் வயலில் நுழைந்ததற்காக மகாதலித் சிறுவனை உயர் ஜாதியைச் சேர்ந்த 4 பேர் உயிருடன் எரித்துக் கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது.
பீகார் மாநிலம் ரோதாஸ் மாவட்டத்தில் உள்ள மோகன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஜியுத் ராம் என்பவரின் மகன் சாய்ராம்(15). மகாதலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் புதன்கிழமை காலை ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது அவரின் ஆடுகள் உயர் ஜாதியைச் சேர்ந்த குகும் சிங் என்பவரின் வயலுக்குள் நுழைந்துவிட்டன. இதை பார்த்த சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் சிறுவனை பிடித்து அடித்து நொறுக்கினர்.
சிறுவன் அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு சென்றார். ஆனால் குகும் சிங் தனது ஆதரவாளர்கள் 3 பேருடன் சிறுவனின் வீட்டுக்கே வந்து அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் சிறுவனுக்கு 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. சிறுவனை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையில் சேர்த்த சிறிது நேரத்தில் சிறுவன் பரிதாபமாக பலியானார்.
இதையடுத்து ஜியுத் ராம் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 4 பேரையும் தேடி வருகிறார்கள். பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சியும் மகாதலித் சமூகத்தை சேர்ந்தவர். அவர் கோவிலுக்கு சென்றால் அது தீட்டு என்று அவர் கால் பட்ட இடத்தை கழுவிவிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications