மகதாயி நதி பிரச்சினை: கர்நாடகாவில் நாளை பந்த்.. பஸ், ஆட்டோ ஓடாது.. பள்ளிகளுக்கு லீவு!
பெங்களூர்: மகதாயி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகத்தில் நாளை, சனிக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு கன்னடர் அமைப்புகள், திரைப்படச் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகதாயி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட நடுவர் மன்றத்தில், வட கர்நாடகத்தின் 4 மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு மகதாயி நதியில் இருந்து 7.56 டிஎம்சி தண்ணீரை கலசா-பண்டூரி கால்வாய் வழியாக எடுத்துக்கொள்ள அனுமதி கோரி கர்நாடக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், கர்நாடகத்தின் மனுவை நடுவர் மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதையடுத்து, கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் கன்னட திரைப்படச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஜூலை 30ம் தேதியான சனிக்கிழமை மாநிலம் தழுவிய பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட வேண்டும் என்பது கன்னட அமைப்புகள் கோரிக்கையாக உள்ளது.
கர்நாடகம், கோவா, மகாராஷ்டிர மாநில முதல்வர்களை அழைத்து பிரதமர், சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, மகதாயி நதி நீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை இதை வலியுறுத்தி, நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.
பந்த்துக்கு அரசே மறைமுக ஆதரவு அளிப்பதாக கூறப்படுவதால், நாளை கர்நாடக அரசு பஸ்கள் இயங்காது என்று தெரிகிறது. திரைப்பட துறையினர் காலை 10.30 மணிக்கு டவுன்ஹால் பகுதியில் இருந்து சுதந்திர பூங்கா பகுதிக்கு கண்டன ஊர்வலம் நடத்த உள்ளனர்.
பந்திற்கு, உணவக சங்கம், நகைக்கடை சங்கம் உள்ளிட்ட 1500 அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன. எனவே நாளை பெங்களூரில் பஸ், ஆட்டோ ஓடாது என்று தெரிகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை நடக்கவிருந்த தேர்வுகள், திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.