மகாராஷ்டிராவில் 100 ரூபாய் நோட்டுகளாக லஞ்சம் கேட்ட அதிகாரி கைது
100 ரூபாய் நோட்டுக்களாக லஞ்சம் கேட்ட வேளாண் துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
சோலாப்பூர்: மகராஷ்டிர மாநிலத்தில் 100 ரூபாய் நோட்டுகளாக ரூ.2,500 லஞ்சம் கேட்ட வேளாண்மை துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க பிரமர் மோடி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல் 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என திடீரென அறிவித்தார்.

தற்போது எங்கு சென்றாலும் இதே பேச்சுதான். சாதாரண டீக்கடை தொடங்கி பெரிய ஷாப்பிங் மால் வரை இரண்டு நண்பர்கள் சந்தித்து கொண்டால் முதலில் ஆரம்பிப்பது ரூபாய் நோட்டு பற்றிதான். அந்த அளவுக்கு எல்லாரையும் இந்த அறிவிப்பு பாதித்துள்ளது. அதுவும் சாதாரண, ஏழை, நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமை மாறி புதிய ரூபாய் நோட்டுக்கள் தாராளமாக புழக்கத்திற்கு வர சில வாரங்கள் ஆகலாம்.
இருப்பினும் கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது போல் லஞ்சத்தை ஒழிக்க ஏதேனும் நடவடிக்கையை மோடி எடுப்பாரா? என்ற கேள்வி அடுத்து எழுந்துள்ளது. ஏனேனில் ரூபாய் நோட்டுகள் தான் மாறியுள்ளன. லஞ்சம் வாங்கும் ஒரு சில அதிகாரிகளின் எண்ணங்கள் இன்னும் மாறவில்லை.
இந்தநிலையில் 1,000, 500 ரூபாய் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் 100 ரூபாய் நோட்டுகளாக லஞ்சம் கேட்ட அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள மோகோல் பஞ்சாயத்து யூனியனில் வேளாண் துறை அதிகாரியாக பணியாற்று பவர் பாலசாகிப் பிகாஜி பாபர்.
இவரிடம், "பில் பாஸ்"ஆக வேண்டும் என்பதற்காக தத்தாத்ரேய் பெட்ஜி என்பவர் அணுகி உள்ளார். அப்போது 2500 ரூபாய் அதிகாரி லஞ்சம் கேட்டுள்ளார். அதுவும் 100 ரூபாய் நோட்டாக கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இது பற்றி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் பெட்ஜி புகார் செய்யதுள்ளார். இதையடுத்து ரசாயனம் தடவிய 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். அந்த லஞ்சப் பணத்தை அதிகாரி வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications