மகாராஷ்டிரா முதல்வரால் 1 மணிநேரம் தாமதமாக அமெரிக்காவுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம்
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் முதன்மை செயலாளர் முறையான விசா உள்ள பாஸ்போர்ட்டை எடுத்து வராததால் மும்பையில் இருந்து அமெரிக்கா சென்ற ஏர் இந்தியா விமானம் சுமார் 1 மணிநேரம் தாமதமாக கிளம்பியது.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தொழில் துறை அமைச்சர் சுபாஷ் தேசாய், தலைமை செயலாளர் ஸ்வாதீன் ஷத்ரியா, முதன்மை செயலாளர் பிரவீன் பர்தேஷி உள்ளிட்டோருடன் கடந்த திங்கட்கிழமை அமெரிக்கா கிளம்பிச் சென்றார். அவர் ஒரு வார காலம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
முன்னதாக அமெரிக்கா செல்ல பட்னாவிஸ் உள்ளிட்டோர் கடந்த திங்கட்கிழமை மும்பை விமான நிலையம் வந்தனர். அப்போது பிரவீனின் புதிய பாஸ்போர்ட்டில் முறையான விசா ஸ்டாம்ப் இல்லை என்று கூறி அவரது பழைய பாஸ்போர்ட்டை எடுத்து வருமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பழைய பாஸ்போர்ட்டை எடுத்து வந்து அதிகாரிகளிடம் காண்பித்துவிட்டு அமெரிக்காவின் நியூவார்க் நகருக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் மூலம் சென்றார்.
The allegation that I forced to delay the flight to New York is false & misleading. I totally deny it.
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) June 30, 2015
அவர் பாஸ்போர்ட்டை எடுத்து வர வேண்டி இருந்ததால் விமானம் 57 நிமிடங்கள் தாமதாக கிளம்பியது. விமானம் தாமதமாக கிளம்பியதற்கு பட்னாவிஸ் தான் காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து அவர் இது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நியூயார்க் செல்ல வேண்டிய விமானத்தை நான் தான் தாமதப்படுத்தியதாகக் கூறுவது தவறது. இந்த குற்றச்சாட்டை நான் ஏற்க மறுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
விமானம் தாமதமாக கிளம்பியதற்கு வேறு சில காரணங்களும் உள்ளதாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.