மகாராஷ்டிராவில் எம்.எல்.சி. தேர்தலை உடனே நடத்த தேர்தல் ஆணையத்துக்கு ஆளுநர் கடிதம்
மும்பை: மகாராஷ்டிராவில் சட்ட மேலவை (எம்.எல்.சி) தேர்தலை உடனே நடத்த வேன்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு மாநில ஆளுநர் கோஷ்யாரி கடிதம் அனுப்பியுள்ளார்.
மகாராஷ்டிரா முதல்வராக கடந்த ஆண்டு உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார். அவர் 6 மாதங்களுக்கு எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சியாக பதவியேற்க வேண்டும்.

கடந்த மார்ச் 24-ந் தேதியன்று எம்.எல்.சி. பதவிகளுக்கான தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
மே 27-ந் தேதிக்கு முன்னதாக உத்தவ் தாக்கரே எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சியாக வேண்டும்; இல்லையெனில் உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அமைச்சரவையுடன் பதவி ஏற்க வேண்டும் என்கிற அரசியல் சாசன நெருக்கடி உருவாகும்.
இதனால் ஆளுநரின் நியமன எம்.எல்.சி.யாக உத்தவ் தாக்கரேவை நியமிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா அமைச்சரவை 2 முறை பரிந்துரையை அனுப்பியது. ஆனாலும் ஆளுநர் கோஷ்யாரி எந்த முடிவும் எடுக்கவில்லை.
இதனையடுத்து பிரதமர் மோடியை தொடர்பு கொண்ட உத்தவ் தாக்கரே, எம்.எல்.சி. தேர்தல் நடத்தாதாலும் ஆளுநர் நியமன அறிவிப்பை வெளியிடாமல் இருப்பதாலும் இருக்கும் சிக்கலை விவரித்து நல்ல முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் உத்தவ் தாக்கரே இந்த விவகாரம் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில்தான், தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஆளுநர் கோஷ்யாரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், லாக்டவுன் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதன் அடிப்படையில் மகாராஷ்டிராவில் சட்ட மேலவை தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தலாம். தற்போதைய நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே, சட்டசபையிலும் மேலவையிலும் உறுப்பினராக இல்லை. அவர் மே 27-ந் தேதிக்கு முன்னதாக மேலவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகையால் எம்.எல்.சி. தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications