"வீட்டுக்கு வீடு போலீஸை நிறுத்தினாலும் பலாத்காரத்தை தடுக்க முடியாது"- இது அமைச்சர் பேச்சு
மும்பை: ஒவ்வொரு வீட்டிலும் போலீஸ்காரரை நிறுத்தினாலும் பலாத்காரங்களை தடுக்க முடியாது என்று மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை கூட்டம் தற்போது நடந்து வருகிறது. அதில் கேள்வியொன்றுக்கு பதில் அளித்து அம்மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் பேசுகையில், பிற மாநிலங்களை ஒப்பிட்டால் மகாராஷ்டிராவில் பெண்கள் மீதான குற்ற சம்பவங்கள் மிகவும் குறைவு. ஆனால் உத்தரபிரதேசத்தில்தான் இக்குற்றங்கள் மிக அதிகம். மகாராஷ்டிர அரசு புதிதாக 500 ரோந்து வாகனங்களை வாங்க உள்ளது. ஒவ்வொரு வாகனத்திலும் ஆண் காவலர்களுடன் பெண் போலீஸ் ஒருவரும் இருப்பார். செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களை தடுக்க 200 பேர் கொண்ட பெண் கமாண்டோ போலீஸ் படை பிரிவு அமைக்கப்படும்.

போலீசாரால் மட்டுமே குற்றங்களை தடுத்து நிறுத்திவிட முடியாது. பெண்களுக்கு எதிராக குற்றங்களை தடுக்க வீட்டுக்கு ஒரு போலீசாரை நியமித்தாலும் முடியாது. மனித மனத்தில் மாற்றம் வர வேண்டும். மனித மனத்தில் தார்மீக எண்ணங்கள் குறைந்துவருவதுதான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருக காரணம். நாட்டில் நடைபெற்ற பாலியல் பலாத்காரங்களில் 6.34 சதவீதம் குடும்பத்தாராலேயே நிகழ்ந்துள்ளது. 6.65 குற்றங்கள் உறவினர்களால் நடந்துள்ளது. 42 சதவீத பலாத்காரங்கள் பெண்களுக்கு ஏற்கனவே தெரிந்த நபர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. மேலும் 40 சதவீத குற்றங்கள் திருமணம் செய்வதாக ஏமாற்றும் காதலர்களால் நிகழ்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் வீட்டுக்கு ஒரு காவலரை நியமித்தாலும் பலாத்காரத்தை தடுக்க முடியாது என்ற பாட்டீலின் வார்த்தையை வைத்து நாடு முழுவதும் பெரும் விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து விளக்கமளித்துள்ள பாட்டீல், அந்த ஒரு வரியை மட்டும் வைத்து பார்த்தால் தப்பாகத்தான் தெரியும். நான் கூற வந்த கருத்தை முழுமையாக படித்து பார்த்தால் எனது பேச்சின் உண்மையான அர்த்தம் தெரியும் என்றார்.












Click it and Unblock the Notifications