டெல்லி மியூசியத்தில் பயங்கர தீ விபத்து... 16 கோடி ஆண்டு பழமையான டைனோசர் எலும்பு எரிந்து நாசம்
டெல்லி: டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லி கால்வடிவம் கொண்ட டைனோசர் புதைபடிவ எலும்பு உட்பட பல்வேறு புராதன சிறப்பு வாய்ந்த பொருட்கள் எரிந்து நாசமாயின.
மத்திய டெல்லியின் தான்சேன் மார்க் பகுதியில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை கூட்டமைப்புக்கு(பிக்கி) சொந்தமான 6 மாடி கட்டிடத்தின் மேல்தளத்தில் மத்திய அரசின் தேசிய இயற்கை வரலாறு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆயிரக்கணக்கான ஊர்வன, நீர், நிலவாழ் பிராணிகளின் மாதிரிகள் மற்றும் பாடம் செய்யப்பட்ட விலங்குகளின் உடல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதனை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், இந்தக் கட்டிடத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.
தீயின் வேகம் தணியாததால், 37 தீயணைக்கும் வண்டிகளில் வந்த 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். சுமார் 4 மணி நேர போராட்டத்திர்குப் பின் தீ அணைக்கப்பட்டது.
ஆனால், அதற்குள்ளாக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லி கால்வடிவம் கொண்ட டைனோசர் புதைபடிவ எலும்பு, பாடம் செய்யப்பட்ட விலங்குகளின் உடல்கள் உட்பட பழமையான, புராதன சிறப்பு மிகுந்த பொருட்கள் பல முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்த தீவிபத்தில் அந்தக் கட்டிடத்தின் 4வது மற்றும் 5-வது தளங்களும் முழுமையாக சேதம் அடைந்தன.

தீவிபத்திற்கான காரணம் என்ன வென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற போது, அந்தக் கட்டிடத்தில் குறைவான மக்களே இருந்ததால், அவர்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதற்கிடையே, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போது, புகையை அதிகமாக சுவாசித்ததால் 6 தீயணைப்பு வீரர்களுக்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவலறிந்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "தீ விபத்தால் எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இழந்தவற்றை எவ்வாறு மீட்பது என்பதற்கான உத்திகள் இன்னும் ஓரிரு நாட்களில் வகுக்கப்படும்'' என்றார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள 34 தேசிய அருங்காட்சியகங்களிலும் உடனடியாக பாதுகாப்பை தணிக்கை செய்யுமாறும் அவர் உத்தர விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications