மத்திய நிதித்துறை செயலர் அரவிந்த் மாயாராம் மாற்றம்! புதிய செயலராக ராஜிவ் மெக்ஹ்ரிஷி நியமனம்!!
டெல்லி: மத்திய நிதித்துறை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளரான அரவிந்த் மாயாராம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய செயலாளராக ராஜிவ் மெஹ்ரிஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றது முதல் அமைச்சகங்களின் செயலாளர்கள் மாற்றப்படாமல் இருந்தனர். கடந்த வாரம் முதல் அமைச்சகங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். மொத்தம் இதுவரை 20க்கும் மேற்பட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த வரிசையில் நேற்று நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம் மாற்றப்பட்டுள்ளார். முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிதித்துறை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராக அரவிந்த் மாயாராம் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு சுற்றுலாத்துறை அமைச்சக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அரவிந்த் மாயாராம் ராஜஸ்தான் மாநில ஐ.ஏ.எஸ். கேடர்.
அவருக்குப் பதிலாக மற்றொரு ராஜஸ்தான் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜிவ் மெஹ்ரிஷி, புதிய நிதித்துறை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் அமைச்சக செயலாளர்கள் உட்பட பல அதிகாரிகள் நேற்று பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications