பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்காக... டெல்லி அரசு பள்ளிகளில் பஞ்சாபி மொழியை கட்டாயமாக்கிய ஆம் ஆத்மி அரசு
டெல்லி: பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக டெல்லி அரசு பள்ளிகளில் பஞ்சாபி மொழியை கட்டாயமாக்கி அறிவித்துள்ளது ஆம் ஆத்மி அரசு.
பஞ்சாப் மாநில சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. 2 முறை ஆட்சியை தக்க வைத்த சிரோண்மணி அகாலிதளம் மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். நிச்சயம் சிரோமணி அகாலிதளம்- பாஜக கூட்டணிக்கு பஞ்சாப் தேர்தல் பெரும் சவாலாக இருக்கும்.

அடித்து ஆடிய ஆம் ஆத்மி
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்கும் இந்த தேர்தல் பெரும் சவால்தான் எனக் கூறப்படுகிறது. கடந்த லோக்சபா தேர்தலின் போது பஞ்சாப் மாநிலத்தின் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் சிரோமணி அகாலி தளம் 4, ஆம் ஆத்மி 4, காங்கிரஸ் 3, பாஜக 2 தொகுதிகளில் வென்றது. ஆம் ஆத்மியின் விஸ்வரூபம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

தொப்பிக்கு பதில் டர்பன்
இதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் வேரூன்றி ஆட்சியைக் கைப்பற்றும் வியூகத்துடன் ஆம் ஆத்மி செயல்பாடுகளை விரைவுபடுத்தியது. தொடர்ச்சியாக பிரசாரங்கள், பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது ஆம் ஆத்மி. அக்கட்சியினர் வழக்கமாக அணியும் தொப்பிக்கு பதிலாக சீக்கியர்களின் டர்பனை கட்டுமாறு கூட கட்டளை பிறப்பித்திருந்தார் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான கேஜ்ரிவால்.

உத்தா பஞ்சாப்-க்கு ஆதரவு
கடந்த சில மாதங்களாக போதைப் பொருள் கடத்தலை முன்வைத்து பஞ்சாப் அரசை கடுமையாக சாடி வருகிறார் கேஜ்ரிவால். தற்போது பஞ்சாயத்து நடக்கும் உத்தா பஞ்சாப் படக் குழுவினருக்கு தம்முடைய ஆதரவைத் தெரிவித்த கேஜ்ரிவால், தணிக்கைக் குழுவை கடுமையாக சாடியிருந்தார்.

பஞ்சாபி கட்டாயம்
தற்போது அதிரடியாக டெல்லி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பஞ்சாபி மொழியை கட்டாயம் என அறிவித்திருக்கிறது கேஜ்ரிவால் அரசு. டெல்லியில் இன்று வெளியான அனைத்து இந்தி பத்திரிகைகளிலும், டெல்லி அரசு பள்ளிகளில் பஞ்சாபி மொழி கட்டாயம். பஞ்சாபி மொழி ஆசிரியர்களுக்கான சம்பளமும் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அதிரடி டெல்லியில் சீக்கியர்கள் கணிசமாக வசிக்கிறார்கள் என்பதற்காக அல்ல...பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்யும் யுக்திதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications