மலேகான் வழக்கு விசாரணை தொடர்பான மனுவை விசாரிக்க நீதிபதி யூ.யூ. லலித் மறுப்பு!
டெல்லி: இந்துத்துவா தீவிரவாதிகள் நிகழ்த்திய மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்ற பெஞ்சில் இருந்து தாம் விலகுவதாக நீதிபதி யூ.யூ. லலித் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மலேகானில் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ந் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 7 பேர் பலியாகினர்.

முதலில் இந்த சம்பவத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்திய மகாராஷ்டிரா சிறப்பு புலனாய்வு அமைப்பினர், இந்த சம்பவத்துக்கு இந்துத்துவா தீவிரவாதிகளே காரணம் என கண்டறிந்தனர்.
இந்த நிலையில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் தம்மை இந்த வழக்கில் மென்மையான போக்கைக் கடைபிடிக்குமாறு நெருக்கடி கொடுத்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் ரோஹினி அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. சமூக ஆர்வலர் ஹர்ஸ் மந்தர் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த பொதுநலன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கலிபுல்லா தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த பெஞ்ச்சில் இடம்பெற்றிருந்த நீதிபதி யூ.யூ. லலித், தாம் இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இம்மனுவை விசாரிப்பதற்கான புதிய பெஞ்சை நியமிக்க தலைமை நீபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications