கர்நாடகா காங்கிரஸ் அரசை கவிழ்க்க மோடி, அமித்ஷா கூட்டுச் சதி: மல்லிகார்ஜூன கார்கே திடீர் எச்சரிக்கை
பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பதற்காக பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சதித் திட்டம் தீட்டி வருகின்றனர். இதனால் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்டோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகாவின் கலபுரகியில் நேற்று வேலைவாய்ப்பு திருவிழா நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் இந்திரா காந்தி அம்மையாரும் ராஜீவ் காந்தியும் தேசத்துக்காக உயிரையே தியாகம் செய்தனர். 11 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி, நாட்டுக்காக என்னதான் செய்தார்?
வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை மூலம் அரசியல் கட்சிகளை மிரட்டுவதைத்தான் மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவிலும் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் எந்த நேரத்திலும் அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் சொதனை நடத்தலாம். இது எல்லாம் மோடி- அமித்ஷாவின் சதித் திட்டம்தான்.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசைக் கவிழ்த்துவிட வேண்டும் என்பதில் மோடியும் அமித்ஷாவும் தீவிரமாக உள்ளனர். ஆகையால் முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் டிகே சிவகுமாரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காங்க்ரஸ்தலைவர்கள் ஒற்றுமையாக இருந்தால் எதுவும் செய்ய முடியாது. நாட்டின் வளச்சிக்கு மோடியால் எதுவும் செய்ய முடியவில்லை.
அம்பேத்கர் பெயரை கூட மோடி மறந்தும் சொல்வது இல்லை; ஆனால் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க மட்டும் அம்பேத்கரை கையில் எடுத்துக் கொள்கிறார் மோடி. அதே அம்பேத்கரின் அரசியல் சாசனத்துக்கு எதிராகவே மோடி செயல்பட்டும் வருகிறார்.
இஸ்லாமியர்களின் வக்பு வாரியத்தில் அதிக சொத்துகள் இருந்ததால், வக்பு சட்டம் கொண்டு வந்தது மத்திய அரசு. இதனையடுத்து கிறிஸ்தவர்களின் சொத்துகளை மத்திய அரசு குறிவைக்கப் போகிறது. இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.












Click it and Unblock the Notifications